திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவின் சார்ஜன்ட் மற்றும் அவரது பிள்ளைகளுக்கு கோவிட்
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் சார்ஜன்ட் மற்றும் அவரது இரு பிள்ளைகள் ஆகியோருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
தடுமல் காய்ச்சல் காரணமாக இன்று வைத்தியசாலைக்கு மருந்து எடுப்பதற்காக வந்த வேளையில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இவர் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் திருகோணமலை - மிகிந்தபுர பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் என தெரியவருவதுடன் அவரது பிள்ளைகள் 30 மற்றும் 24 வயதுடையவர்கள் எனவும் தெரியவருகின்றது.
இதேவேளை அபயபுர பகுதியை சேர்ந்த 7 வயதுடைய சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன் இன்று காலை முதல் திருகோணமலை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் மற்றுமொரு கும்புறுபிட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதி ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவர்கள் நால்வரும் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையின் கோவிட் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், கோவிட் இடைநிலை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.