பாரிய அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ள டெல்டா வைரஸ் - பொது மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
நாட்டில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கும் முதலாம் கட்டத் தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக் கொண்டவர்களுக்கும் திரிபடைந்த டெல்டா வைரஸ் பாரிய அச்சுறுத்தலைத் தோற்றுவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குறிப்பிட்டளவான சனத்தொகையினர் முழுமையாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் வரையில் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றுவது மிகவும் அவசியம் என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு பரிசோதனைப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
திரிபடைந்த டெல்டா வைரஸ் என்பது மிக இலகுவாகப் பரவக்கூடியதாகும். இது தடுப்பூசியை பெற்று கொள்ளாதவர்களுக்கும் அல்லது ஒரு கட்ட தடுப்பூசியை மாத்திரம் பெற்று கொண்டவர்களுக்கும் இந்த டெல்டா வைரஸ் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.
நாடளாவிய ரீதியில் குறிப்பிடத்தக்களவான சனத்தொகையினர் முழுமையாகத் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும் வரையில் உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும்.
கோவிட் வைரஸ் பரவலினால் ஏற்பட்ட அச்சுறுத்தல் நிலை இன்னமும் முடிவிற்குக் கொண்டு வரப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.