மட்டக்களப்பில் 1000 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் 1000 பேருக்கான தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் இன்றைய தினம் கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்றைய தினம் பிரதேச செயலக, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், உள்ளூராட்சிமன்ற ஊழியர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன், சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் ஊடாக ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவு மக்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.