சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பிற்குள் கடந்த 09ஆம் திகதி மற்றும் 14ஆம் திகதிகளில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட 14 கடற்றொழிலாளர்களுக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் இன்றிலிருந்து பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தின் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில், கடந்த 09ஆம் திகதி 10 இந்திய கடற்றொழிலாளர்களும், கடந்த 14ஆம் திகதி 4 இந்திய கடற்றொழிலாளர்களும் இரணைதீவு பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மன்னார் வடக்கு இரணைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் விசாரணைகளின் பின்னர் கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்றுக் கொண்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் வி. கனிஸ்ரன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் து. டிறோசன், செ. சதீஸ்குமார் ஆகியோர் இவர்களை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

இதனையடுத்து, குறித்த 14 கடற்றொழிலாளர்களையும் இன்று (22) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
145 கடற்றொழிலாளர்கள் கைது
இந்நிலையில், இன்று (22) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் பொன்னுத்துரை கிருசாந்தன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த 09ஆம் திகதி கைது செய்யப்பட்ட 10 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கு தலா நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அது பத்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்ட 4 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் தலா நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, பத்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், படகோட்டிக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டதாக 21 படகுகளுடன் 145 இந்திய கடற்றொழிலாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.