சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோனிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கொழும்புக் கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று மேல் மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர், தேசப்பந்து தென்னக்கோனை எதிர்வரும் பெப்ரவரி 16ம் திகதியன்று மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளது.
2022, ஜூலை 9 ஆம் திகதியன்று ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட 17.8 மில்லியன் ரூபா பணம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேவையற்ற செல்வாக்கு
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் சமூக செயற்பாட்டாளர் மகிந்த ஜயசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தென்னகோன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகைக்குள் கிடைத்த பணத்தை நீதிமன்றக் காவலில் வைக்காமல் பொதுப் பாதுகாப்பு அமைச்சரிடம் ஒப்படைக்க சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோன் தேவையற்ற செல்வாக்கு செலுத்தியதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
கோட்டை காவல்துறை பொறுப்பதிகாரி, குறித்த பணத்தை பொதுப் பாதுகாப்பு
அமைச்சரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியமையானது, சட்டத்தின் கீழ்
தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.