உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைதானவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு !
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 2 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், 62 பேருக்கும் தொடர்ந்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதி காணொளிமூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 21.04.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர்; ஸஹ்றான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காத்தான்குடியை சேர்ந்த 65 பேரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
அதேவேளை ஸாரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், உட்பட 4 பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்திருந்தனர். இரு வேறு வழக்குகளை கொண்ட 69 பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் 5 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து 64 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த 64 பேரும் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் இந்த வழக்குகள் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது காத்தான்குடியைச் சோந்த இருவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில், அவர்களை சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய பிணையில் விடுவித்ததுடன் ஏனையவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துவர முடியாததையடுத்து அவர்களை காணொளி மூலமாக 62 பேரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.





இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
