சம்பூர் மனித எச்சங்கள் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
திருகோணமலை - சம்பூரில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பான வழக்கு இன்று(30) மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, அகழ்வு பணியை ஆராயும் முகமாக குறித்த வழக்கானது, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி வழக்கு மாநாட்டுக்காக தீர்மானிக்கப்பட்டதுடன், குறித்த மாநாட்டுக்கு வர வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறும் சம்பூர் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின்படி
குறித்த வழக்கானது கடந்த தவணை நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த அறிவுறுத்தலுக்கு அமைய, இன்றைய தினம் (30) அழைக்கப்பட்டபோது சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்பொருளியல் திணைக்களம் ஆகியவற்றிடமிருந்து நீதிமன்ற அறிக்கையினை கோரியிருந்தது.
அறிக்கைகளை ஆராய்ந்த நீதிபதி எச்.எம். தஸ்னீம் பௌசான், குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின்படி, குறித்த மனித எச்சங்கள் நீண்டகாலத்திற்கு உட்பட்டவையாக இருப்பதாகவும், அவற்றை மேலதிக ஆய்வுக்குட்படுத்தி, குறித்த எச்சங்கள் காயங்களினூடாக ஏற்பட்ட மரணமா? அல்லது இயற்கை மரணமா? என்பது தொடர்பிலும் குறித்த எச்சங்கள் குற்றத்தின் ஊடான மரணத்தின் மூலம் சம்பந்தப்பட்டவையா? என அறிய வேண்டியிருப்பதால், இதனை மேலும் ஆழமான ஆய்வுக்குட்படுத்த வேண்டிருப்பதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று, தொல்பொருளியல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த பிரதேசத்தில் மயானம் இருந்ததாகவோ அல்லது மயானமாக பயன்படுத்தப்பட்டது சம்பந்தமாகவோ அல்லது தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான பிரதேசமாக இருந்ததாக தகவல்கள் இல்லை எனவும் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் அகழ்வுப்பணியை மேற்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பாக வழக்கு மாநாடு ஒன்றின் மூலம் அதற்கான தீர்மானத்தை எடுப்பதற்காக எதிர்வரும் 06ஆம் திகதி புதன்கிழமை திகதியிடப்பட்டுள்ளதுடன் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறும் சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam
