கோட்டாபயவுக்கு எதிராக நீதிமன்று பிறப்பித்த உத்தரவு.. 14 ஆண்டுகால போராட்டத்திற்கு முதல் வெற்றி!
இலங்கையில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவானது நீதிக்கான போராட்டத்திற்குக் கிடைத்த முதல் வெற்றியாகும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்ற உத்தரவின்படி, முன்னாள் ஜனாதிபதியும் அன்றைய பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச நிகழ்நிலை ஊடாகவாவது நீதிமன்றத்தில் முன்னிலையாகி, இவ்வழக்குத் தொடர்பாகச் சாட்சியமளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர், "கடந்த காலங்களில் இலங்கையானது முழுமையான அரச அனுசரணையுடன் பல்லாயிரக்கணக்கான மக்களை அநியாயமாகக் காணாமல் ஆக்கிய ஒரு 'குற்றவியல் நாடாகச்' செயற்பட்டது.
25 ஆயிரம் மக்கள் மாயம்
குறிப்பாக, 2005ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் காணாமல் போயுள்ளதாக, அரசால் நியமிக்கப்பட்ட மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையிலேயே அதிகாரப்பூர்வமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட பொதுமக்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் வடக்கு மற்றும் கிழக்கில் தீவிரமாகப் போராடிக் குரல் எழுப்பியவர்களே லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவராவர்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடிய இந்த இரு மக்கள் தலைவர்களுமே அன்றைய அரச இயந்திரத்தால் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டனர்.
அதுமட்டுமன்றி, இந்தக் கடத்தல்களுடன் தொடர்புடைய முக்கிய சாட்சியங்களும் திட்டமிட்ட முறையில் மூடிமறைக்கப்பட்டன.
மக்களைக் கடத்தி, கடத்தப்பட்டவர்களுக்காகப் போராடியவர்களையும் கடத்தி, பின்னர் அதற்குரிய சாட்சியங்களையும் அழித்த அன்றைய அரசாங்கம், இறுதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பால் தொடுக்கப்பட்ட இந்த வழக்கையும் கூட இல்லாமல் செய்யவே கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினூடாக முயன்றது.
நீதிமன்ற உத்தரவு
எனினும், வழக்குகளையோ அல்லது சாட்சியங்களையோ இனிமேலும் மறைக்கவோ, அமுக்கவோ முடியாது என்பதை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தனது தீர்க்கமான உத்தரவின் மூலம் இன்று உறுதிப்படுத்தியுள்ளதுடன், வழக்கை முடக்குவதற்குப் போடப்பட்ட சதிகளையும் முறியடித்துள்ளது.

இவ்வழக்கில் லலித், குகன் ஆகிய இருவர் மட்டுமன்றி, கடந்த காலங்களில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட மேலும் 50 இற்கும் மேற்பட்டோரின் விவரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எனவே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாகச் சாட்சியமளிப்பதன் மூலம், இந்தச் சட்டவிரோதமான கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல்கள் மற்றும் அதன் பின்னணியில் இருந்த அரசியல் படுகொலைகள் குறித்த உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் எனப் போராடும் தரப்பினர் எதிர்பார்க்கின்றனர்.
நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவானது நீதிக்கான போராட்டத்தில் கிடைத்துள்ள ஒரு சாதகமான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்பமாகும்.
இந்த நீதிக்கான போராட்டத்தை நாம் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியான மக்கள் போராட்டங்களாகவும் எவ்வித தடையுமின்றித் தொடர்ந்து முன்னெடுப்போம். கோட்டாபய ராஜபக்ச உரிய சட்ட நடைமுறைகளின்படி நீதிமன்றத்தின் முன் சாட்சியமளித்தே தீர வேண்டும். இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நீதி நிச்சயம் நிலைநாட்டப்படும்." என்றார்.
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri