ஜே.ஆர். தேர்தலை ஒத்திவைத்ததன் பலனை நாடு அனுபவித்தது:மைத்திரிபால
எந்த தேர்தலையும் ஒத்திவைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) இணங்காது என அதன் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
ஆறில் ஐந்து பெரும்பான்மை பலம் இருந்தும் ஜே.ஆர். ஜெயவர்தனவின் (J.R.Jayawardane) அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்ததன் பலனை இறுதியில் நாடு மாத்திரமல்ல ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) அனுபவிக்க நேரிட்டது எனவும் அப்படியான நிலைமை மீண்டும் ஏற்பட இடமளிக்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் நாட்டின் முதன்மை மற்றும் வலுவான அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் கட்சிக்காக புதிய ஊடக நிலையம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே மைத்திரிபால சிறிசேன இதனை கூறியுள்ளார்.
சஜித் பிரேமதாசவுடன் கூட்டணியை ஏற்படுத்துவீர்களா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மைத்திரி, அப்படியான எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை எனக் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான அரசியல் கூட்டணியே எதிர்காலத்தில் உருவாகும் எனவும் சுதந்திரக் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் எவரும் அந்த கூட்டணியில் இணைந்துக்கொள்ள முடியும் எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.