எரிபொருள் இறக்குமதியில் ஊழல்! 400 ரூபாவுக்கு மேல் அதிகரித்த விலைக்கு காரணம் கூறும் சம்பிக்க
அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் இறக்குமதியில் நிகழ்ந்துள்ள ஊழல் காரணமாகவே தொடர்ந்தும் அதிக விலையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக சம்பிக்க ரணவக குற்றம் சாட்டியுள்ளார்.
எரிபொருள் விலை குறைப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது முன்னாள் அமைச்சரும் ஐக்கிய குடியரசு கட்சியின் தலைவருமான பாட்டலி சம்பிக ரணவக மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறைந்த விலையில் எரிபொருள் விற்பனை
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்துள்ள பின்னணியில், எவ்வித வரிகளும் விதிக்கப்படாமல் ஒரு லீட்டர் பெட்ரோலை 220 ரூபாவிற்கும், ஒரு லீட்டர் டீசலை 235 ரூபாவிற்கும் கொழும்பு துறைமுகத்தில் இறக்க முடியும். அதன் காரணமாக இதனை விட குறைந்த விலையில் எரிபொருட்களை விற்பனை செய்ய முடியும்.
அவ்வாறு வழங்க முடியாவிட்டால், 400 ரூபாவிற்கும் அதிகமான விலைகளில் தொடர்ந்து எரிபொருட்களை விற்பனை செய்யும் விலை சூத்திரத்தை நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்றேன்.
கடந்த ஏப்ரல் 08ஆம் திகதிக்குப் பின்னர் உலக சந்தையில் எரிபொருள் விலையில் பெரியளவில் அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை. யுத்தம் ஆரம்பமான தருணத்தில் பழைய கையிருப்புகளுக்கும் உடனடியாக விலையை உயர்த்திய அரசாங்கம், தற்போது உலக சந்தையில் விலை குறைந்த போதிலும் உள்நாட்டில் விலையைக் குறைக்கத் தயக்கம் காட்டுகின்றது.
அண்மைக்காலத்தில் அரசாங்கம் மேற்கொண்ட எரிபொருள் இறக்குமதியின் போது டிராஃபிகுரா (Trafigura) நிறுவனத்திற்கு ஒரு லீட்டர் டீசலுக்கு 98 ரூபா அதிகமாகச் செலுத்தப்பட்டுள்ளது. மற்றுமொரு நிறுவனத்திற்கு 120 ரூபா அதிகமாகச் செலுத்தப்பட்டுள்ளது. இவை பாரியளவிலான ஊழல்களாகும். இவற்றை மூடிமறைப்பதற்காக அரசாங்கம் தற்போது மக்களிடம் பழிவாங்கி வருகிறது.
அரசாங்கத்தின் தோல்விகளை விமர்சிப்பவர்களை ஒடுக்குவதற்கும், அவர்களை சிறையில் அடைப்பதற்கும் அரசாங்கம் முயற்சி செய்தாலும், அதற்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. மக்கள் 50 வருடங்களுக்கு முன்பே நிராகரித்த 'அரிசிப் புத்தகம்' அல்லது 'பங்கீட்டு முறைமை' போன்ற பழைய வழிமுறைகளின் ஊடாக நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.
அரசாங்கம் தனக்கு ஒரு சட்டத்தையும், எதிர்க்கட்சிக்கு மற்றொரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது. நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களை மேலும் ஏமாற்றாது தகுந்த நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 23 மணி நேரம் முன்
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan