வாழைச்சேனையில் முப்பது வயதிற்கு மேற்பட்டோருக்கு கோவிட் தடுப்பூசி
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சினோபாம் கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ரி.எஸ்.சஞ்ஜீவ் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
அதன்படி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலுள்ள முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கோவிட் - 19 தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு சினோபாம் தடுப்பு ஊசிகள் கிடைக்கப் பெற்ற நிலையில் 14 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஊடாக தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரனின் வழிகாட்டலில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.