நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயது எல்லை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை - சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு..!
உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பையும் நீதித்துறையின் சுயாதீனத்தையும் சீர்குலைக்கும் என்றும் அந்த கட்சி எச்சரித்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதியரசரின் வயது எல்லை
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த முன்மொழிவுக்கான எந்தவொரு விளக்கத்தையும் அரசாங்கம் வழங்கத் தவறியுள்ளது.
இந்த தெளிவற்ற தன்மை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேல் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது அரசியலமைப்பால் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அதனை அரசியலமைப்பு திருத்தத்தின் மூலமே மாற்றியமைக்க முடியும்.

புதிய அரசியலமைப்பை உருவாக்கி, அதனை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்களின் ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பதாக அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசியலமைப்பு திருத்தங்களுக்கு எதிராக முன்னர் எடுத்த நிலைப்பாடுகளுக்கு முரணாக ஆளும் கூட்டணி தற்போது செயற்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் வலியுறுத்தல்
ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தகுதியுடைய ஏனைய நீதிபதிகளின் பதவி உயர்வுகளை அநியாயமாக தாமதப்படுத்தும் என்பதுடன், மற்றவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மதிக்கக் கோரும் அரசியலமைப்பின் 28ஆவது பிரிவை மீறுவதாகவும் அமையும்.
மேலும், இந்த முன்மொழிவானது சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும்.
நீதித்துறையைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்து நபர்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்த முயற்சிக்கு எதிராக தலையிட வேண்டும்.

அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி , இந்த முன்மொழிவை அரசாங்கம் உடனடியாக மீளப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு
இதேவேளை, நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் முயற்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பு நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு எடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் குறித்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு வருடங்களால் நீட்டிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தேசித்துள்ளார்.

இது தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
வயது எல்லை இரண்டு வருங்களாக அதிகரிப்பு
இந்தத் தருணத்தில் நீதிமன்றங்களில் தற்போது சேவையாற்றி வரும் நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதானது, நீதிமன்றத்தின் சுதந்திரத்தில் செல்வாக்கு செலுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு வெளிப்படையான முயற்சியாகவே பொதுமக்கள் கருதக்கூடும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீண்ட காலத் திட்டமிடல் எதுவுமின்றி இவ்வாறானதொரு நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்வது, அந்த நீதிமன்றங்களின் கௌரவத்திற்கும் நீதியரசர்களின் கௌரவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என தாம் நம்புவதாக சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய அரசாங்கம் இத்தகையதொரு நடவடிக்கையை முன்னெடுத்தால், அது எதிர்கால அரசாங்கங்களுக்கும் நீதித்துறை சார்ந்த பணிகள் தொடர்பாக, நீண்ட காலத் திட்டமிடல் இன்றி அரசியலமைப்பில் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan