நல்லூர் பிரதேச சபை பகுதிகளில் குவியும் கழிவுகள்: 11 இடங்களில் தொடர் கண்காணிப்பு
யாழ். நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது பாரபட்சம் இன்றிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக கழிவுகள் கொட்டப்பட்டு வந்த 11 இடங்கள் கண்காணிப்பு கமராக்களால் அவதானிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது,

"நல்லூர் பிரதேச சபையின் கழிவகற்றல் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயற்றிட்டங்களை அண்மைக்காலமாக மிகவும் வினைத்திறனான வகையில் மேற்கொண்டு வருகின்றோம்.
இதன்படி, நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் 11 இடங்களை அடையாளப்படுத்தி அங்கு கண்காணிப்புக் கமராக்களைப் பொருத்தியுள்ளோம்.
கழிவுகளை வீசுபவர்கள் அடையாளம்
அங்கு தொடர்ச்சியாகக் கழிவுகளை வீசுபவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு, கிராம அலுவலர்கள் ஊடாக அவர்களின் தகவல்கள் பெறப்பட்டு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறு பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்கள் பலர் அடையாளப்படுத்தப்பட்டு கடந்த இரண்டு மாத காலத்தினுள் இரண்டு இலட்சம் ரூபாவுக்கு மேல் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
குறித்த செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கென ஒரு தனி அலகும் நல்லூர் பிரதேச சபையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் சில இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
எனவே, எதிர்காலத்தில் நடவடிக்கைகள் மேலும் கடினமாயிருக்கும். ஆதலால், தேவையற்ற அசௌகரியங்களைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் செயற்பட வேண்டும் என்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |