ஒலுவில் மீன்பிடி துறைமுகம் திறக்கப்பட்டமையால் தொடர் கடலரிப்பு : நிந்தவூர் கடற்தொழிலாளர்கள் பாதிப்பு(Photo)
அண்மையில் மீண்டும் திறக்கப்பட்ட ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தினால் நிந்தவூர் பிரதேசத்தில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக அதனை மூடும் பட்சத்தில் தொடர் கடலரிப்பை தடுக்க முடியும் என பொது மக்களும் கடற்தொழிலாளர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் கடற்தொழிலாளர்கள் மேலும் தெரிவித்ததாவது,
’’தொடர் கடலரிப்பின் காரணமாக கடற்தொழிலாளர்கள் தங்கள் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தங்களின் மீன்பிடி சம்பந்தமான விடயங்களை கலந்தாலோசித்துக் கொள்வதற்கும், அவைகளை சிறந்த முறையில் நிர்வகித்துக் கொள்வதற்கும் பல தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டு தற்பொழுது நடு வீதிக்கு வரும் துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
தொடர் கடலரிப்பு
மேலும் ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தினை உடனடியாக மூடும் பட்சத்தில் தொடர் கடலரிப்பை தடுக்க முடியும்.
கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் தொடர் கடலரிப்பின் மூலமாக பல பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்த போதும் அது அரசியல்வாதிகள் மற்றும் அரச அலுவலகங்கள் மூலமாக சிறிது சிறிதாகவே நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்தது. இவ்வாறு இருக்கும் நிலையில், நிந்தவூர் பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள கடற்தொழிலாளர்களுக்கு சொந்தமான கடற்தொழிலாளர் சங்கக் கட்டிடம் தொடர் கடலரிப்புக் காரணமாக முழுமையாக கடலால் காவு கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கட்டிடமானது கடற்தொழிலாளர் தங்களது கடற்தொழிலாளர் சங்க செயற்பாடுகளை முன்னெடுத்து வந்ததுடன் அதன் பிறகு நிந்தவூர் ஒன்பதாம் பிரிவு சன சமூகநிலைய கட்டிடமாகவும் இயங்கி வந்துள்ளது.
கடலரிப்பால் ஏற்பட்ட பாதிப்புக்கள்
இதில் கடற்தொழிலாளர்களின் கூட்டங்கள், வேறு சங்கங்களின் கூட்டங்கள் மற்றும் இதர நிகழ்வுகள் என்பன நாள்தோறும் நடைபெற்று வந்ததுடன் இந்த கட்டிடத்தின் மேல் மாடியில் இப்பகுதியில் உள்ள கடற்தொழிலாளர்களின் மீன்பிடி உபகரணங்கள் என்பன பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில் கட்டிடத்தின் ஒரு பகுதி கடலரிப்பின் காரணமாக கடலால் இழுத்துச் செல்லப்பட்டிருந்தது.ஆனால் இன்னும் மீதமாக இருந்த இரண்டு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி முழுமையாக கடலரிப்பினால் தற்போது சேதமடைந்துள்ளது.
இருந்தபோதும் கடந்த காலத்தில் இந்த கட்டிடம் அமைந்துள்ள பிரதேசத்தில் ஏற்பட்ட கடலரிப்பைத் தடுப்பதற்காக கடலோர பாதுகாப்புத் திணைக்களத்தின் வழிகாட்டலுடன் தற்காலிகமாக மண்மூடைகள் நிரப்பப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தாலும் கடல் அலைகளுக்கு அது தாக்குப்பிடிக்க முடியாமல் அள்ளுண்டுள்ளது.
ஆனால் இந்த பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்தை நிரந்தரமாக பாதுகாப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் நிந்தவூர் பிரதேச செயலகமோ அல்லது கரையோர பாதுகாப்பு திணைக்களமோ அல்லது இப்பிரதேச அரசியல்வாதிகளோ எடுக்கவில்லை
ஒலுவில் துறைமுகம்
இவ்வாறான நிலை தொடர்ந்து செல்லுமானால் கடைசியில் கடற்கரை வீதியினூடாக பயணம் செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டு மீள திறக்கப்பட்ட பின்னர் நிந்தவூர் பிரதேசத்தில் காணப்படுகின்ற அதிகமான கரையோரப் பிரதேசங்கள் கடல் அலையினால் காவு கொள்ளப்பட்டு அந்த நிலங்கள் இருந்த அடையாளம் தெரியாமல் செல்கின்றது.
இதிலே இப்பிரதேச மக்களின் தென்னந்தோப்புகள் கடற்தொழிலாளர்களின் மீனவ வாடிகள் என இவைகள் நீண்டு கொண்டே செல்வது தொடர்கதையாகின்றது.
எனவே, நிந்தவூர் கடற்கரைப் பிரதேசத்தில் இருக்கும் வளங்களையாவது பாதுகாப்பதற்கு இவர்கள் அனைவரும் முன்வர வேண்டும்’’ என மக்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.