நீர்ப்பாசனப் பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை
நாட்டிலே காணப்படுகின்ற நீர்ப்பாசனப் பிரச்சனைகளை நேரில் சென்று ஆய்வு செய்து அவற்றுக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு தொடர்ந்து எமக்கு ஜனாதிபதியும், நீர்ப்பாசன அமைச்சரும், அலோசனை தெரிவித்து வருகின்றார்கள் என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எந்திரி. கே.டீ.நிஹால் ஸ்ரீவர்த்தன (K.D.Nihal Srivardhana) தெரிவித்துள்ளார்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டம், நவகிரிப் பிரிவுக்குக்குட்பட்ட நிஹால் ஸ்ரீவர்த்தன அணைக்கட்டு இன்று (06) திறந்து விவசாயிகளின் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.
இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நடைபெற்று முடிந்த திட்டங்களைப் பார்வையிடவும், அடுத்த வருடம் எவ்வாறான திட்டங்களை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பிலும் ஆய்வு செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நான் இரண்டு நாட்கள் உத்தியோக பூர்வ கள விஜயம் மேற்கொண்டு வந்துள்ளேன்.
இனிவரும் காலங்களில் என்ன வகையான திட்டங்களை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பில் ஆராய்வு செய்வதுதான் எமது பிரதான நோக்கம்.
அதற்குரிய குறிக்கோளை அடைவது என்பதே அரச உத்தியோகஸ்த்தராக நான் கருதுகின்றேன். அதற்காகவேதான் நாங்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றோம்.
விவசாயத்திற்கும், நீர்ப்பாசனத்திற்கும் முன்னுரிமை வழங்கி அராசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
அதுவே இந்த அரசாங்கத்தின் குறிக்கோளாகவும் காணப்படுகின்றது.
நாட்டிலே காணப்படுகின்ற நீர்ப்பாசனப் பிரச்சினைகளை நேரில் சென்று ஆய்வு செய்து அவற்றுக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு தொடர்ந்து எமக்கு ஜனாதிபதியும், நீர்ப்பாசன அமைச்சரும், அலோசனை தெரிவித்து வருகின்றார்கள்.
இப்பிரதேச அரசியல்வாதிகளும், எமது செயற்பாடுகளுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றார்கள்.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களைச் செய்துள்ளோம். அவை தற்போது முடியும் தருவாயில் உள்ளன.
நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் தற்போது 2000 வேலைத்திட்டங்கள் முடியும் தருவாயில் காணப்படுகின்றன.
எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் நிர்ப்பாசன அமைச்சர் அனைத்து மாவட்டங்களுக்கும் விஜயம் செய்து நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்பில் ஆராயவுள்ளார்.
அவரிடமும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் கூறி அதனை எங்களுடாக நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.
இப்பிரதேசத்தில் இன்னும் பல அணைக்கட்டுக்கள் பழுதடைந்து காணப்படுகின்ற.
அவற்றையெல்லாம் ஆராய்ந்து எதிர்வருகின்ற காலத்தில் இப்பிரதேசத்தில் பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடாந்தம் வெள்ளம் ஏற்படும் பிரச்சனை உள்ளது. அதற்காகவேண்டி வடிச்சல் ஆற்றுப் பகுதிகளை துப்பரவு செய்து அகலப்படுத்தியுள்ளோம்.
மேலும் காணப்படும் ஏனைய வடிச்சல் ஆற்றுப்பகுதிகளை துப்பரவு செய்யவும், அகலப்படுத்தவும் அடுத்த வருடமும் மேற்கொள்வதற்கு முயற்சி எடுப்போம்.
அதிக நிதி செலவு செய்து நிருமாணிக்கப்பட்டுள்ள இந்த திட்டங்களை விவசாயிகள் தங்களுடைய ஒரு சொத்தாக நினைத்து இதனைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
22.3 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிருமாணிக்கப்பட்ட இந்த அணைக்கட்டு 5 அடி உயரம் கொண்ட 10 வான் கதவுகளுடன் நிருமாணிப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியைச்சூழவுள்ள 500 ஏக்கர் வயலில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் நன்மையடையவுள்ளதாக நவகிரிப் பிரிவு பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் கீதா அருணன் (Geetha Arunan) தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி.ந.
நாகரத்தினம் (N.Nagaratnam), நவகிரிப் பிரிவு பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் கீதா அருணன், மற்றும் ஏனை நீர்பாசனப் பொறியியலாளர்கள், விவசாய அமைப்புக்களின்
பிரதிநிதிகள், விவசாயிகள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.













