அரசியலமைப்பு பேரவைக்கு ஆட்கள் இல்லை: ஐந்து பேருடன் ஆரம்பிக்க யோசனை!
அரசியலமைப்பு பேரவையின், செயற்பாடுகளை குறைந்தபட்சம் ஐந்து உறுப்பினர்களுடன்
ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அதிகாரபூர்வ உறுப்பினர்கள் ஆவர். அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை தனது வேட்பாளராக நியமித்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமை வேட்பாளராக நியமித்துள்ளார்.
இதற்கமைய அரசியலமைப்பு பேரவைக்கு இன்னும் ஐந்து பேர் நியமிக்கப்படவேண்டியுள்ளனர்.
ஐந்து பேருக்கு நியமனம்
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உடன்படிக்கையின் மூலம் ஒரு நாடளுமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சியில் உள்ள சிறுபான்மைக் கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்துடன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் பெயரிடப்பட வேண்டும்.
இதனைத் தவிர, ஏனைய மூன்று உறுப்பினர்களும் நாடாளுமன்றத்திற்கு வெளியில் இருந்து நியமிக்கப்பட வேண்டும்.
இந்தப் பணியிடங்களுக்கு நவம்பர் 14ஆம் திகதி விண்ணப்பங்கள் கோரப்பட்டு, விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு நாளையுடன் (28.11.2022) முடிவடையவுள்ளது.
இவ்வாறு நியமிக்கப்பட்ட குறித்த ஐந்து பேரைக்கொண்டு அரசியலமைப்புப் பேரவையின் செயற்பாடுகளை ஆரம்பிக்க அரசாங்கம் பரிசீலனையை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில் பெரும்பாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக இருக்கும் இரண்டு இடங்கள், அடுத்த வாரத்திற்குள் நிரப்பப்படும் என்று அரசாங்கம் நம்புகிறது.
அவ்வாறெனின் உறுப்பினர் தொகை 7ஆக இருக்கும். இதேவேளை சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தற்போதைய ஆணைக்குழுக்களில் உள்ள 90 சதவீத உறுப்பினர்கள் மாற்றப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.