கோட்டாபயவை பலவீனப்படுத்த சதித்திட்டம்! - முக்கிய அமைச்சர் வெளியிட்ட தகவல்
ஜனாதிபதியை பலவீனப்படுத்தும் சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன், கட்சி முடிவெடுக்கும் எந்த நேரத்திலும் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
கட்சி முடிவெடுக்கும் எந்த நேரத்திலும் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார் எனவும், அரசாங்கத்தில் இருந்து விலகத் தீர்மானித்தால் அதனை செய்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டுமன்றி சுமார் 60 பேர் வெளியேறுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அப்போது அரசாங்கம் மூன்றில் இரண்டு பங்கு தனிப்பெரும்பான்மையைக்கூட இழக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.
தற்போதைய நிலைமை தொடர்பில் ஜனாதிபதி மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்த அவர், ஜனாதிபதியை பலவீனப்படுத்தும் சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தனிப்பெரும்பான்மையை இழக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அரசாங்கத்தில் இருப்பதாகவும் அவர்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.