குறுகிய காலத்தில் தோல்வியடைந்த அரசாங்கமாக இந்த அரசாங்கத்தை கருத வேண்டும்! - சாணக்கியன்
மிகவும் குறுகிய காலத்தில் தோல்வியடைந்த அரசாங்கமாக தற்போதைய அரசாங்கத்தை கருத வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சுதந்திரம் கிடைக்கப் பெற்ற காலம் முதலே பிரித்தாளும் அரசியலே முன்னெடுக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் ஆட்சியாளர்கள் அனைவரும் பிளவினை ஏற்படுத்தி அதன் ஊடாக அரசியல் பிழைப்பு நடாத்தியவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1949ம் ஆண்டில் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்கள் நாடு கடத்தப்பட்டது முதல் சில ஆண்டுகளுக்கு முன்னதாக திகனவில் இடம்பெற்ற தாக்குதல்கள் வரையில் அனைத்துமே அரசியல் நோக்கத்திலானவை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற காலத்தில் ஆட்சி செய்த ஜனாதிபதியும் பிரதமரும் பாராட்டப்பட வேண்டியவர்கள் எனவும் அந்த தாக்குதலை அவர்கள் அரசியலுக்காக பயன்படுத்திக்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் அடுத்த தேர்தலில் வெற்றியீட்ட மேலும் இவ்வாறான தாக்குதல்களை திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை மேம்படுத்தி நாட்டை முன்னோக்கி நகர்த்தி வாக்குகளைப் பெற்றுக்கொள்வதனை விடவும் அநேகமான ஆட்சியாளர்கள் மக்களை பிளவுபடுத்தி அரசியல் செய்தே அதிகாரத்திற்கு வர முயற்சிக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிச் சிங்கள கொள்கை, பல்கலைக்கழக மாணவர்களுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்படாமை போன்ற காரணிகளினால் திறமையான பலர் வெளிநாடுகளுக்கு செல்ல நேரிட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர் இவர் தான் பெயரளவில் எவரையேனும் காண்பிக்காது உண்மையில் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாணி கண்டறியப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.