ஐ.நாவிற்கு தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள் முக்கிய அறிக்கை
வருகின்ற செப்டெம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் 46/1 பிரேரணை பற்றிய மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. 46/1 பிரேரணையை இலங்கை அரசாங்கம் நிராகரித்து இருக்கிறது.
முக்கியமாக ஆதாரங்களைத் திரட்டுவதற்கான அதிகாரத்தை மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்குக் கடந்த கூட்டத் தொடரில் மனித உரிமை பேரவை வழங்கியிருந்தது.
இதற்கான நிதி ஒதுக்கீடு இடம்பெற்று அலுவலர்கள் நியமிக்கப்பட்ட நிலையிலே ஆதாரங்களைத் திரட்டுவதற்கு மனித உரிமை ஆணையம் தயாராகி உள்ளமையைத் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் முக்கியமாகக் கருதப்படுகின்ற எதிர்வரும் மனித உரிமை பேரவையின் அமர்வில் நீதி பொறிமுறைக்கான நடவடிக்கைகள் காத்திரமான முன்னேற்றத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வேளையில் 46/1 பிரேரணைக்குப் பின்னராக அரசாங்கம் தமிழர் தாயகப் பரப்பில் கட்டவிழ்த்துவிட்ட தமிழ் இனத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அறிக்கையிடுவது எனத் தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ஆகியோரின் கையொப்பத்துடன் விரிவான அறிக்கை ஒன்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் 46/1 பிரேரணைக்குப் பின்னராகத் தமிழர் தாயகத்தில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தமிழினத்துக்கு எதிரான விடயங்களான காணி அபகரிப்பு, தொல்லியல் சார்ந்த நடவடிக்கைகள், நினைவேந்தல்களுக்கான தடைகள், பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையிலான கைதுகள், சட்ட நடவடிக்கைகள், தடுத்து வைத்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகங்களில் ராணுவ அதிகாரிகளை நியமித்தல், காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேட வேண்டிய அவசியம் இல்லை என்ற அரசாங்கத்தினுடைய நிலைப்பாடு, பொத்துவில் இருந்து பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி பயணத்தின் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள், கைதுகள், அன்மையில் அரசினால் அறிவிக்கப்பட்ட அவசரக்கால சட்டத்தினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அபாய நிலைகள் என்ற விடயங்களை உள்ளடக்கப்பட்டுள்ளன.





