சௌபாக்கியா விற்பனை நிலையம் அமைப்பதில் குழப்பநிலை சீராகியது
வவுனியா - தாண்டிக்குளம் ஏ9 வீதியின் கரையில் சௌபாக்கியா விற்பனை நிலையம் அமைப்பதற்குப் புகையிரத திணைக்கள உத்தியோகத்தர்கள் தடை ஏற்படுத்திய நிலையில், பிரதேச செயலாளரின் தலையீட்டினால் நிலைமை சுமுகமாகியுள்ளது.
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ஏ9 வீதி மற்றும் புகையிரத பாதைக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள அரசகாணியில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களிற்கான சௌபாக்கியா விற்பனை நிலையம் ஒன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நாளையதினம் (13) இடம்பெறவிருந்தது.
இதனையடுத்து குறித்த நிலப்பரப்பினை துப்புரவாக்கும் பணி பயனாளர்களின் பங்களிப்புடன் இன்று (12) மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த பகுதிக்கு வருகைதந்த புகையிரத திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் துப்புரவு பணிக்குத் தடை ஏற்படுத்தியதுடன், இது புகையிரத திணைக்களத்திற்குரிய நிலம் எனத் தெரிவித்தனர்.
இதனால் சற்றுநேரம் குறித்த பகுதியில் குழப்பமான சூழல் ஏற்பட்டிருந்தது.
சம்பவ இடத்திற்குச்சென்ற பிரதேச செயலாளர் நா.கமலதாசன் புகையிரத திணைக்கள உத்தியோகத்தர்களுடன் பேச்சு வார்த்தையை முன்னெடுத்ததையடுத்து நிலைமை சுமுகமாக்கப்பட்டு துப்புரவாக்கும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.