வடக்கு, கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்கும்! - சாணக்கியன்
இந்த அரசாங்கமானது தேவையென்று சொன்னால் எவரையும் தனது மடியில் வைத்துக்கொள்ளவும், தமது தேவைக்காக அப்பாவி இளைஞர்களை சிறையில் வைக்கவும் செய்வார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiya Rasamanickam) தெரிவித்துள்ளார்.
3000 பனை விதைகள் நடும் வாலிபர்கள் என்னும் தலைப்பில் பனை விதைகள் நடும் வேலைத்திட்டம் இன்று இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் போரதீவுப்பற்றில் பனை விதைகள் நடும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய மாவட்டத்தைப் பொறுத்தவரையிலே கடந்த ஒரு வருட காலமாக தற்போதிருக்கின்ற அரசாங்கமானது மக்களால் தெரிவு செய்யப்பட்டதற்குப் பிறகு விஷேடமாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதன்முறையாக 20 வருடங்களுக்குப் பிறகு தெரிவு செய்யப்பட்ட நிலையிலே மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற வளங்களை அழித்துக்கொண்டிருக்கின்ற செயற்பாட்டை காணக்கூடியதாக இருக்கின்றது.
எங்களுடைய மண்வளம், காணிகள், வீதிகள் போன்ற அனைத்து விடயங்களையுமே இவர்கள் மோசமாக கையாள்வதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. விஷேடமாக மண் அனுமதிப்பத்திரங்கள் அரசாங்கத்துடன் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களிலேயே இருப்பது வரலாற்றிலே இதுதான் முதற்தடவையாக இருக்குமென நான் நம்புகின்றேன்.
இலங்கை தமிழரசுக் கட்சியானது தமிழ் மக்களின் நலனுக்காக தொடர்ச்சியாக செயற்படும் ஒரு கட்சியாகும். கடந்த ஏழு தசாப்தங்களாக தமிழ் மக்களின் உரிமைக்குரலாக செயற்பட்ட ஒரு கட்சியாகும். எங்களுடைய பிரதேசத்திலிருக்கின்ற வளங்களை பாதுகாப்பதும் எங்களுடைய ஒரு பொறுப்பாக நாங்கள் எடுத்திருக்கின்றோம்.
இந்த நோக்கத்திற்காகத்தான் ஏனைய கட்சியை சேர்ந்தவர்கள் எங்களுடைய வளங்களை அழித்து தங்களுடைய வருமானத்தை மட்டும் பார்க்கும் போது எங்களுடைய வளங்களைப் பயன்படுத்தி தங்களுடைய குடும்பங்களையும், தாங்கள் சார்ந்தவர்களையும், ஆதரவாளர்களையும் மாத்திரம் பார்த்து வருமானத்தை உழைக்கின்ற போது இலங்கைத் தமிழரசுக் கட்சியானது பனை விதைகளை நட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலே எதிர்காலத்தில் நல்லதொரு இயற்கை சூழலை அமைப்பதற்கும்,எங்கள் மண்வளத்தை பாதுகாப்பதற்கும் உதவியாக இந்த திட்டத்தை முன்னெடுத்திருக்கின்றது.
எங்களுடைய அரசியல் ரீதியான விடயங்களில் தமிழரசுக்கட்சியும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் எவ்வாறு அக்கறையாக இருக்கின்றதோ.அதேபோல எங்களுடைய இயற்கை வளங்களை பாதுகாப்பதிலும் நாங்கள் அக்கறையாக இருக்கின்றோம்.
இந்த அரசாங்கமானது தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கின்ற ஒரு அரசாங்கமாக இருக்கின்றது. நானும் நாடாளுமன்றத்தில் அடிக்கடி பேசுகின்ற ஒரு விடயம்.
இந்த அரசாங்கமானது எங்களுடைய இளைஞர்களை தொடர்ச்சியாக அச்சுறுத்தி பலரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. தெற்கில் விடுதலைப்புலிகளை மீளகட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பதாக கூறி சிங்களை மக்களை அச்சம் கொள்ளச்செய்வதற்காக இவ்வாறு தமிழ் இளைஞர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளவர்களாக கூறி நீண்ட காலமாக எந்தவித விசாரணைகளும் இன்றி தடுத்து வைத்துள்ளனர். நேற்றைய தினம் நடைபெற்ற ஒரு திறப்பு விழாவிலே கே.பி அவர்களை இந்த நாட்டினுடைய சிறுவர் கல்விக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த அவர்கள் கட்டியணைத்து மிகவும் பாசமாக உரையாடுவதை காணக்கூடியதாக இருந்தது.
விடுதலைப் புலிகளுடைய சொத்துக்கள் தன்னிடம் இல்லை என்று அவர் பல விடயங்களை சொல்கின்றார். அவர் என்ன சொல்கின்றார் என்பதை நாம் விட்டுவிடுவோம். கே.பி அவர்கள் போர்க்குற்றம் புரிந்தார் என பல குற்றச்சாட்டுகள் அவர் மீது இருக்கின்றது.
ஆனால் எங்களுடைய தமிழ் இளைஞரொருவர் முகநூலிலே விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட ஒரு செய்தியை பதிவிட்டது ஒருவருடம் சிறையில் வைத்திருக்கக்கூடிய ஒரு குற்றம் ஆனால் கே.பி அவர்களை நீங்கள் கட்டியணைத்து உறவாடலாம். சிங்கள மக்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த அரசாங்கமானது தேவையெனக் கருதினால் எவரையும் தங்கள் மடியிலே வைத்திருப்பார்கள்,தங்கள் தேவைக்காக அப்பாவி இளைஞர்களையும் சிறையில் வைத்திருப்பார்கள். இதுவே இந்த அரசாங்கத்தினுடைய உண்மையான நிலைப்பாடாகும்.
யுத்தம் நிறைவடைந்து பன்னிரண்டு வருடங்கள் முடிவடைந்துவிட்டன. கே.பி மீது எத்தனையோ குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த அரசாங்கம் மட்டுமல்ல கடந்த நல்லாட்சி அரசாங்கமும் கே.பியை விசாரணை செய்ததாக நான் அறியவில்லை.
இளைஞர்களுக்கு ஒரு நீதி, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற எவராக இருந்தாலும் அவர்களுக்கு இன்னொரு நீதி என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.
பியால் நிசாந்த என்கின்ற இராஜாங்க அமைச்சரும் அவர் சார்ந்தவர்களும் கூட நான் நாடாளுமன்றத்திலே பேசுகின்ற போது என்னைப் பார்த்து மிக மோசமான வார்த்தைகளைச் சொல்வார்கள். நேற்றைய தினம் கூட நான் கல்வியைப் பற்றி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த அவர்களிடம் கேள்வியை கேட்கின்ற போது நிமலன்சா அவர்கள் என்னை ஒரு தீவிரவாதி என்று சொன்னார்.
நான் அவரை பார்த்து நீ ஒரு குடுகாரன் என்று கூறினேன். இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்தவுக்கு கே.பி யார் என்பதை நிமல் லன்சாவால் சொல்ல முடியாதா? இப்படியான நாடகங்களை செய்து தொடர்ச்சியாக நீங்கள் தமிழ் மக்களை ஒரு காலமும் ஏமாற்ற முடியாது.
சிங்கள மக்களையும் தொடர்ச்சியாக ஏமாற்ற முடியாது. தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியிலே இந்த அரசாங்கத்தின் உண்மையான முகத்தை நாங்கள் புரிந்துகொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
இனிவரும் காலங்களில் விஷேடமாக வடக்கு,கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் நாடாளுமன்றத்திற்கோ, மாகாணசபைக்கோ, உள்ளுராட்சி சபைகளுக்கோ நீங்கள் தெரிவு செய்து அனுப்புபவர்கள் மக்கள் நலன் சார்ந்த சிந்தனையோடு இருக்கின்றவர்களாக இருக்க வேண்டும்.
தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியிலே இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டுமென்று பனை விதைகளை நடுகின்றவர்களைப் போல மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கின்றவர்களை தெரிவு செய்து அனுப்ப வேண்டும்.
ஆற்றுவாழைகளை துப்புரவு செய்கின்றோம் என்ற பெயரில் மண் அனுமதிப்பத்திரங்களை வழங்கி எங்கள் மாவட்டத்தின் வளங்களை அழிக்கின்ற கட்சியைச் சேர்ந்தவர்களை தயவு செய்து நீங்கள் தெரிவு செய்யாதீர்கள்.
மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்று பசில் ராஜபக்ச அவர்கள் கூட்டத்தில் கூறிய விடயம். சிலவேளை இந்திய வெளிவிவகார செயலாளர் அவர்களின் வருகையின் சில விடயங்களாக இருக்கலாம் அல்லது ஐரோப்பிய ஒன்றிய விஜயத்தின் சில அழுத்தங்களாக இருக்கலாம்.
சுமந்திரன் அவர்களின் சட்டத்தினை அமுலாக்கி அதனூடாக தேர்தல் நடத்துவார்கள் என செய்திகளில் பார்த்திருந்தேன். மாகாணசபை கலைக்கப்பட்டு ஐந்து வருடங்கள் கடக்கவிருக்கின்றது. நிச்சயமாக தேர்தலை நடத்த வேண்டும். அதற்கு நாங்கள் ஆயத்தமாக இருக்கின்றோம் என்பதையும் சொல்ல வேண்டும்.
இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை மக்கள் சரியாக அவதானித்திருந்தால் எதிர்வரும் காலங்களில் வடக்கு கிழக்கில் நிச்சயம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி வரும் என்பதை சொல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
