பெற்றோல் விற்பனை செய்யும் கடை தீப்பற்றியதில் முற்றாக சேதம்: விற்பனையாளர் பலத்த காயம்
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை 99ம் கட்டை சந்தியில் பெற்றோல் விற்பனை செய்யும் கடை (பெற்றோலை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யும் கடை) ஒன்று தீப்பற்றியதில் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (09) மதியம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பெற்றோல் கடையில் கடையின் உள் பகுதியில் சோளக் கதிரை தீ மூட்டி அடுப்பில் வைத்திருந்த நிலையில், பெற்றோல் தீப்பிடித்திருக்கலாம் என ஆரம்பக் கட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.
பிரதேச வாசிகள் இணைந்து தீப்பற்றி எரிந்ததைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதில் கடை உரிமையாளரான இரு பிள்ளைகளின் தாயான எச்.எம்.சம்சுநிசா வயது(45) தீக்காயங்களுக்கு உள்ளானதுடன், தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்துக்கு தடயவியல் பொலிஸார் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.