வலிகாம பாடசாலையொன்றில் மாணவர்கள் மீது ஆசிரியர்கள் துன்புறுத்தல்களை மேற்கொண்டுள்ளதாக முறைப்பாடு
வலிகாமம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் மீது அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர்கள் சிலரால் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கும் நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 11ஐ சேர்ந்த ஆண் மாணவர்களை, அவர்களின் சம்மதம் இன்றி வலுக்கட்டாயமாக உடலில் பச்சை குத்தியதை பார்வையிட வேண்டும் என கூறி பாடசாலையின் தனியான ஓர் இடத்திற்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்று அவர்களின் ஆடைகளை களைந்து பார்த்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனேகமான மாணவர்கள் பாடசாலை செல்லாத நிலையில், அங்கு கல்வி கற்பிக்கும் பெண் ஆசிரியர்களை குறித்த மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி மீண்டும் பாடசாலையில் இணைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் தாம் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொளப்பட வேண்டும் எனவும் தெரிவித்து முறைப்பாட்டாளர் ஊடாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் அமைப்பாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது,
குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்ததாகவும், இது தொடர்பில் மாகாண கல்வி அமைச்கை விளக்கமளிக்குமாறு எழுத்துமூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.