கேள்வியெழுப்பிய ஊடகவியலாளரின் உயிருக்கு அச்சுறுத்தலென முறைப்பாடு
தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரம, பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டுள்ளார் என தெரியவருகிறது.
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரட்னவுக்கு கடிதமொன்றை குறித்த ஊடகவியலாளர் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், தனக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல் குறித்து விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
பயணக் கட்டுப்பாட்டுக்கு மத்தியில் கொழும்பிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கேள்விகளை எழுப்பியிருந்த நிலையிலேயே தனக்கு இவ்வாறான உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றதாகவும், தனது கேள்விகளால் சிலர் தனிப்பட்ட ரீதியிலும், அரசியல் ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் ஊடகவியலாளர் என்ற ரீதியில் தான் தனது கடமையையே செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.