படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 12ஆவது நினைவு தின நிகழ்வு மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவு தின நிகழ்வில் தீபச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன் மற்றும் மாவட்ட ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு நீதிகோரி அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் லசந்த உட்பட படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





