ஜனாதிபதி மாளிகையை சுற்றி நிர்மாணிக்கப்படும் இரும்பு வேலிகள் :பாதுகாப்பு கடமைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினர்
மக்களின் எதிர்ப்பு போராட்டம் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்புக்காக ஜனாதிபதி மாளிகையை சுற்றி இரும்பு வேலிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
பிரதமர் உட்பட ஆளும் தரப்பினரின் பாதுகாப்புக்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினர்
அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட அரசாங்க தரப்பினரின் பாதுகாப்புக்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் பொலிஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் ஆயிரத்து 500 பேரும் இராணுவத்தை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் அடங்குகின்றனர்.
இவர்களை தவிர வடமேல், வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் பொலிஸ் நிலையங்களில் இருந்து 3 ஆயிரம் பொலிஸார் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் ஆயிரம் பேரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு அரண்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு பொலிஸ் அதிகாரிக்கு முப்படையை சேர்ந்த இரண்டு பேர் என்ற வீதத்தில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஒரு பாதுகாப்பு அரணில் 100 பொலிஸார் மற்றும் 200 முப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கொழும்பில் நாளை நடைபெறும் போராட்டம்
இதனிடையே நாளைய தினம் கொழும்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்துக்கொள்ளவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட உள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடலாம் என பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.