கொழும்பு துறைமுக நகர் பற்றி கருத்து வெளியிட விரும்பவில்லை – சரத் வீரசேகர
கொழும்பு துறைமுக நகர் பற்றி கருத்து வெளியிட விரும்பவில்லை என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் இன்றைய தினம் அமைச்சர் சரத் வீரசேகரவிடம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுக நகர் தனியான ஆட்சிக்கு உட்படும் என வெளியான தகவல்கள் குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விகளுக்கு தாம் பதிலளிக்கப் போவதில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எந்தவொரு தீர்மானத்தையும் சிந்தித்து எடுக்கக் கூடியவர் எனவும் அவரது தீர்மானத்தை அமுல்படுத்த தாம் ஒத்துழைப்பு வழங்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு பற்றிய சட்ட மூலம் இன்னமும் நாடாளுமன்றிற்கு சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி எடுக்கும் தீர்மானம் குறித்து அவரிடமே கேட்க வேண்டும் எனவும் அவரது தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படும் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.