கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு யோசனை நாடாளுமன்றில் நிறைவேற்றப்படுவது தொடர்பில் எச்சரிக்கை
கொழும்பு “போர்ட் சிட்டி” பொருளாதார ஆணைக்குழு யோசனையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர் கொழும்பு “போர்ட்சிட்டி” (துறைமுக நகரம்) சீன கொலனியாக (குடியிருப்பு பகுதியாக) மாறும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
இது நாட்டின் பொதுவான சட்டத்திற்கு புறம்பாக செயற்பட துறைமுக நகரத்துக்கு வழியை ஏற்படுத்திக்கொடுக்கும் என்று ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கூறுகையில்,
நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக முன்வைக்கப்படும் யோசனையின் படி, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையத்தை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடைக்கும். இதன்படி அவரால் பெயரிடப்பட்ட ஐந்து அல்லது ஏழு உறுப்பினர்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களாக இருப்பார்கள்.
இதனையடுத்து துறைமுக நகரம், இலங்கையின் பிரதேச சபை அல்லது நகராட்சி மன்றம் போன்ற எந்த ஒரு உள்ளூராச்சி சபைக்கு கீழ் வராது. மாறாக ஐந்து அல்லது ஏழு உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையத்தின் கீழ் அது கொண்டு வரப்படும்.
இந்த உறுப்பினர்களுக்கு சிறப்பு நிதி அதிகாரங்கள் மற்றும் நீதித்துறை அதிகாரங்கள் வழங்கப்படும். ஆகமொத்தம் “போர்ட் சிட்டி” ஒரு தனி பிரதேசமாக செயற்படும்.
இந்த யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னர் உள்ளூர் தொழிலதிபர்கள் துறைமுக நகரத்தில் எந்தவொரு வணிகத்தையும் நிறுவ அனுமதிக்க மாட்டார்கள்.
பிரதேசத்தில் உள்ள ஊழியர்களுக்கு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்திலேயே வேதனம் வழங்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.