இலங்கைக்கு கொக்கெய்ன் போதைப்பொருள் கடத்தல்: தி.மு.க உறுப்பினர்கள் இருவர் கைது
360 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற திராவிட முன்னேற்றக்கழக அரசியல்வாதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை கடந்த 26ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் முன்னாள் திமுக உறுப்பினர் ஜெய்னுதீன் (வயது 45), தற்போது ராமேஸ்வரம் 19வது தொகுதி திமுக உறுப்பினராக இருக்கும் சர்ப்ராஸ் நவாஸ் (வயது 42) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக கடலோர பொலிஸாரால் கைது
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படவிருந்த 360 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருளை பறிமுதல் செய்த சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் இருவரும் தமிழக கடலோர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்படையினர் தீவிர சோதனையின் போது அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்றை தடுத்து நிறுத்திய பொலிஸார், 30 கொள்கலன்களில் 20 லிட்டர் கொக்கைன் மூலப்பொருள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
ராமேஸ்வரத்தை சேர்ந்த சாதிக் அலி, என்பவருக்கு சொந்தமான படகில், இந்த மூலப்பொருள், இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல்
சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 360 கோடி என கூறப்படுகிறது.
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட இந்த சகோதரர்கள் சரக்கு பாரவூர்தி சேவை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இவர்களுக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் குழுக்களுடன் தொடர்புள்ளதா என மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகள் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.