செவனகல சீனி தொழிற்சாலையை மறு அறிவித்தல் வரை மூட தீர்மானம்
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் செயற்பட்ட செவனகல சீனி தொழிற்சாலையை மறு அறிவித்தல் வரும் வரை காலவரையறையின்றி மூடுவதற்கு அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நிறுவனத்திற்கு ஏற்படும் நிதி இழப்பைக் குறைக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு விடுமுறை
கடந்த 25 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணி முதல் செவனகல பிரிவின் சில ஊழியர்கள் தமது கடமைகளிலிருந்து விலகி, உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததனர்.

இதன் காரணமாக ஏற்படும் நிதி இழப்பைத் தடுப்பதற்காக கடந்த 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களிலும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், கடந் 28 ம் திகதி மீண்டும் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பிரதம நிறைவேற்று அதிகாரியினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், தொழிற்சாலையின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் ஊழியர்கள் வழக்கம் போல் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்ததன் காரணமாகவே, இவ்வாறு தொழிற்சாலையைக் காலவரையறையின்றி மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமை
கடந்த காலங்களில் இரண்டு பில்லியன் ரூபா லாபத்துடன் இயங்கிய செவனகல சீனி உற்பத்தி தொழிற்சாலை, தற்போதைக்கு நட்டத்தில் இயங்குவதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

அத்துடன் கடந்த வருடத்துக்கான ஊக்குவிப்பு போனஸ் கொடுப்பனவும் இதுவரை வழங்கப்படாத நிலையில், அவற்றைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொண்டிருந்தனர்.
எனினும் மறு அறிவித்தல் காலவரையறையின்றி தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதன் காரணமாக சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாக தொழில்வாய்ப்புகளை இழக்க நேர்ந்துள்ளது.
அதற்கு மேலதிகமாக தொழிற்சாலையை நம்பி வாழ்ந்த சுமார் நான்காயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.