ஜெனீவாவில் இடம்பெற்ற தமது 6ஆவது காலமுறை மீளாய்வில் இலங்கை பங்கேற்பு
குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் 2023ஆம் ஆண்டு மார்ச் 08 மற்றும் 09ஆம் திகதி ஜெனீவாவில் இடம்பெற்ற தமது 6ஆவது காலமுறை மீளாய்வில் இலங்கை பங்கேற்றுள்ளது.
மனித உரிமைகள் பேரவையினால் இரண்டு நாட்களில் மூன்று 2 மணி நேர அமர்வுகளின் போது, ஒரு கலப்பு வடிவத்தில் மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
மனித உரிமைகள் பேரவை 18 சுயாதீன நிபுணர்களைக் கொண்ட ஒரு அமைப்பாகும்.
இது குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை உரியமுறையில் செயல்படுத்துவதைக் கண்காணிக்கிறது.
பல முக்கிய முன்னேற்றங்கள்
2019ஆம் ஆண்டு இலங்கையின் 6 ஆவது கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின், நாட்டில் பல முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஜெனிவாவிற்கான ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தனது ஆரம்ப அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 21வது திருத்தம், அரசியலமைப்பின் ஊடாக ஜனநாயக ஆட்சியை மேலும் வலுப்படுத்துதல், தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்துதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்குதல்.
மேலும் சுயாதீன உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம், அனைத்துக்கட்சி மாநாடு, நல்லிணக்கத்திற்கான அமைச்சரவை உபகுழுவை ஸ்தாபித்தல் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை முறையான உரிமையாளர்களுக்கு விடுவித்தல் போன்ற விடயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை
மீளாய்வுக்குட்பட்ட காலப்பகுதியில் இலங்கை, எதிர்பாராத சமூக - பொருளாதார சவால்களை எதிர்கொண்டதாகவும், கடந்த வருடத்தில் அரசாங்கத்தின் முக்கிய நோக்கமானது பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பது மற்றும் அவசர சமூக - பொருளாதாரத் தேவைகளை வழங்குவதே இருந்தது என்றும் தூதுவர் அருணதிலக சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த இரண்டு நாள் அமர்வுகளில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் நேரில் கலந்துகொண்டிருந்தனர்.
கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள், நீதி, சிறைச்சாலை
விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு, பாதுகாப்பு அமைச்சு, பெண்கள்,
சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, பொது பாதுகாப்பு
அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும்
மீளாய்வில் இணைந்திருந்திருந்தனர்.