எதிர்ப்பினை வெளிப்படுத்துவது பிரஜைகளின் கடமை : சுமந்திரன் ஆதங்கம்
எதிர்ப்பு போராட்டங்களை நடாத்துவதுதான் ஜனநாயக பிரஜைகளின் கடமை என்பதை தற்போதைய ஆட்சியாளர்களிடம் பொலிஸார் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான எதிர்ப்பு போராட்டங்களை நடாத்தியவர்களே இன்று ஆட்சியாளர்களாகவும் வந்துள்ளார்கள் என்பதை இன்று நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாவட்ட செயலகத்தினை மறித்து ஆர்ப்பாட்டம் நடாத்தியதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பான வழக்குகள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவந்தன.
புலனாய்வாளர்களின் அறிக்கைகள்
இன்றைய தினம் இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிபதி த.தர்சினியினால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது எதிராளிகளின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.
வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பணங்களை முன்வைத்த நிலையில் இந்த வழக்கின் இறுதித்தினமாக ஜுன் 09ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி, கச்சேரிக்கு செல்லுகின்ற வழி பாதையினை மறித்தார்கள் என்கின்ற குற்றச்சாட்டை முன்வைத்து எங்களுடைய கட்சியின் உறுப்பினர்கள் பலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அந்த நேரத்தில் ஒரு சில மாதங்களுக்கு பின்னர் இந்த வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது நானும் சக சட்டதரணிகளும் முன்னிலையாகி இது எந்த அடிப்படைகளும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம்.
அந்த வேளையில் பொலிஸார் இது தொடர்பான புலனாய்வாளர்களின் அறிக்கைகள் தேவைப்படுகின்றது அவற்றை புலனாய்வு செய்வதற்கு தங்களுக்கு அவகாசம் தேவை என்று கோரிய நிலையில் அவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது.
ஆனால் இப்பொழுது ஏறக்குறைய மூன்று வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் கூட இன்னமும் எதுவிதமான குற்றச்சாட்டும் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படவில்லை.
வழக்கை ஒரு நகர்த்தல் பத்திரத்தில் அழைக்க..
எனினும், அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பது என்பது பிரஜைகளின் கடமை என உச்ச நீதிமன்றம் தமது தீர்ப்புக்களில் கூறியிருக்கின்றது. அவ்வாறு இருக்கின்ற போது எந்தவித அடிப்படையும் இல்லாமல் வெறுமனே அலைக்கழிப்பதற்கு என்று இந்த வழக்கு கொண்டு செல்லப்பட்டு கொண்டிருக்கின்றது.
இந்நிலையிலேயே, குறித்த வழக்கை ஒரு நகர்த்தல் பத்திரம் மூலமாக அழைத்து இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கின்றோம்.
நீதவான் கடைசி ஒரு தவணை அவர்களுக்கு கொடுப்போம் ஏனென்றால் ஏற்கனவே ஜூன் 9 திகதி இடப்பட்டு இருப்பதன் காரணத்தினால் அது இறுதி தினமாக கொடுப்போம் அன்று அவர்கள் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை எடுக்கா விட்டால் வழக்கை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும் கடைசி தினமாக ஜூன் 9 கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இன்று ஆட்சியில் இருக்கின்றவர்களிடத்திலாவது கேட்டு அறிந்து கொள்ளுமாறும் இவ்வாறு எதிர்ப்பு போராட்டங்கள் நடத்துவது தான் ஜனநாயக பிரஜைகள் உடைய கடமை என பல நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கி இருக்கின்றது.
மக்கள் போராட்டங்களை நடத்த திட்டம்
குறிப்பாக பொலிஸார் அவர்களுக்கு இடையூறு செய்யாமல் இருப்பது மாத்திரமல்ல அவர்கள் அவ்வாறான போராட்டங்களை நடத்துவதற்கு உடந்தையாகவும் உதவியாகவும் இருக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டிருக்கின்றது.
ஆகையினால் வெறுமனே வேற்று கட்சி என்பதன் காரணத்தினால் பழி தீர்க்கும் நோக்கோடு இழுத்தடிப்பதற்காக இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதன் காரணத்தை எடுத்துக் கூறி இருக்கின்றேன்.
இறுதித்தனமாக ஜூன் 9 தவணை இடப்பட்டு இருக்கின்றது. காணி அபகரிப்பு சம்பந்தமாக புதிதாக ஆட்சியில் வந்தவர்களுக்கு முதல் தடவை எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்தபோது விபரமாக அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு கூறி இருக்கின்றார்கள்.
அதற்கு தாங்கள் இந்த விடயத்தை கையாள்வதற்கு சற்று காலம் தர வேண்டும் என்றும் கேட்டு இருக்கின்றார்கள். அந்த கால அவகாசம் இப்பொழுது முடிவடைந்து இருக்கின்றது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
ஆகையினால் அரசாங்கம் இது சம்பந்தமான விடயங்களில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் பின்னணியில் நாங்கள் தொடர்ச்சியாக விரைவில் மக்கள் போராட்டங்களை நடத்த திட்டமிட்டு இருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |