பெருமளவு சந்தேகநபர்கள் சார்பில் பிணை மனுக்களை தாக்கல் செய்த மர்ம நபர்களால் சர்ச்சை
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 45க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் சார்பில் பிணை மனுக்களை தாக்கல் செய்த இருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்றத்தில் பிணை மனுக்களை தாக்கல் செய்ததாக கூறப்படும் இருவர் தொடர்பில் உடனடியாக விசாரணையை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணையையடுத்து விரிவான அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.
மர்ம நபர்களால் சர்ச்சை
வெல்லம்பிட்டியை சேர்ந்த நிமல் கருணாதிலக மற்றும் கொட்டாஞ்சேனையை சேர்ந்த அன்டனி அலெக்சாண்டர் ஆகிய இருவர் தொடர்பிலேயே விசாரணைகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகர்கள் எனக் கூறப்படுபவர்களுக்கு பிணை பெற்றுக்கொடுப்பதற்காக குறித்த இருவரும் தொழிலாகவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கைகளை பரிசீலித்ததனை தொடர்ந்து நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அத்துடன், போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 45 சந்தேகநபர்கள் சார்பில் ஒரே வழக்கறிஞரின் ஊடாக பிணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவருக்காக சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனு தொடர்பில் நீதிமன்றத்தில் வெளிவந்த தகவல்களையடுத்தே இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பிணை மனுதாரர் யார் என்பதை உறுதியாக உறுதிப்படுத்துவதற்காக அவரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. எனினும், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த நபர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
பிணை மனு
இதன்போது, குறித்த பிணை மனுவைத் திரும்பப் பெற வழக்கறிஞர் அனுமதி கோரிய போதிலும், அதற்கு அனுமதி மறுத்த நீதிபதி, சந்தேகநபரையும் அவரது நெருங்கிய உறவினர்கள் இருவரையும் நீதிமன்றத்திற்கு அழைத்து விடயங்களைக் விசாரித்துள்ளார்.

பிணை மனுவை சமர்ப்பிப்பதற்காக நிமல் கருணாதிலக என்பவருக்குத் தாங்கள் எந்தவித அறிவுறுத்தல்களையும் வழங்கவில்லை எனவும், அத்தகைய நபர் எவரென்றும் தனக்குத் தெரியாது எனவும் சந்தேகநபரின் நெருங்கிய உறவினர்கள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த பிணை மனுவை நிராகரிக்க நீதிபதி நடவடிக்கை எடுத்தார். மற்றொரு பிணை மனு வழக்கறிஞர் பிரபாஸ்வர பீரிஸ் ஊடாகச் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் நீதிமன்றத்தில் இது போன்றதொரு விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதன்போது, குறித்த போதைப்பொருள் வழக்கின் சந்தேகநபரை நீதிமன்றத்திற்கு அழைத்து, அவருக்காக பிணை மனுவை சமர்ப்பித்த நபர் தனக்குத் தெரிந்தவரா என நீதிபதி வினவியுள்ளார்.
அதற்குப் பதிலளித்த சந்தேகநபர், தனக்காக பிணை மனுவைச் சமர்ப்பித்த நபர் யார் என்பது தனக்குத் தெரியாது என தெரிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18