உதவியின் வடிவில் தமிழினத்தை அழிக்கும் சீனாவின் திட்டம்
தமிழ் ஈழ ஆயுதப் போராட்டத்திற்கு ஆணிவேராகவும்,அச்சாணியாகவும் இருந்த கடற்புலிகளின் 9 ஆயுத விநியோக மற்றும் வர்த்தக கப்பல்களின் அழிவுக்கும் 160 க்கு மேற்பட்ட ஒப்பற்ற தலைசிறந்த தமிழீழ மாலுமிகளின் சாவுக்கும் முக்கிய சூத்திரதாரியாக இருந்தது சீனா.
2006ஆம் ஆண்டுக்கும் 2008ஆம் ஆண்டின் உறுதிக்கும் இடையில் நடந்த ஆயுதக் கப்பல் மூழ்கடிப்பாகும். இந்தச் சீனாவின் நயவஞ்சகத்தனம் பற்றிய தகவல்கள் மிக அதிர்ச்சிகரமானவை.
இவ்வாறு கப்பல் மூழ்கடிப்பு விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு தோள்கொடுத்து தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழிக்க உதவி செய்து இலங்கை அரசை பாதுகாத்த சீனா, இப்போது கடல் தொழிலாளிகளுக்கு வலையும் நிவாரணமும் கொடுத்து தாயகத்தில் தமிழினத்தின் இருப்பை இல்லாதொழிக்கும் நயவஞ்சக நோக்குடன் மீனவர்களுக்கு வலைகொடுத்து தமிழர்களுக்கு வலை வீசுகிறது. இந்த வாரம் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் மன்னார் பகுதிகளுக்கு மூன்று நாள் விஜயத்தை இலங்கைக்கான சீனத் தூதுவர் மேற்கொண்டிருக்கிறார்.
இந்த விஜயத்தின் மூலம் இந்திய தமிழ் மீனவர்களால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மீனவர்களுக்கு வலைகளும் நிவாரணப் பொருட்களும் வழங்கி மீனவர்களின் வாழ்விற்கு வழி காட்டப் போகிறாராம்.
""ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்"" என்ற கூற்றை இது ஞாபகப்படுத்துகிறது. இவ்வாறு வடபாதி மீனவர்களுக்காக சீனா முதலைக் கண்ணீர் வடிக்கிறது. இது எத்தகைய நயவஞ்சகமான சூழ்ச்சித் திட்டம் என்பதை சற்று ஆழமாக ஆராய வேண்டியுள்ளது.
தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்ற சீனாவின் நயவஞ்சகத்தை தமிழ் மக்கள் உணரவில்லை என தப்புக் கணக்குப் போடுகிறது சீனா.
தமிழ் மக்கள் இலகுவில் ஏமாற்றப்படக் கூடிய தேசிய இனம் அல்ல. தமிழர்களுக்கு இனிப்பு கொடுத்து அழைத்துச் சென்று படுகுழியில் தள்ளிவிட முடியாது.
தமிழ் மக்கள் நீண்ட தொடர்ச்சியான அரசியல் பண்பாட்டையும், அறிவியல் வளர்ச்சியையும், அரசியல் முதிர்ச்சியையும் உடைய வளமான பலம்பொருந்திய தேசிய என்பதை சீனர்கள் மறந்து விடக்கூடாது.
அதனை தமிழ்த் தேசிய இனம் நிரூபித்துக் காட்ட வேண்டிய காலம் இது. கிபி 1407ல் சீனக் கடற்படை தளபதி அட்மிரல் ஷன் - ஹி பாரிய கடற்படையுடன் இந்துசமுத்திரத்திற்குள் முதன்முறையாக நுழைந்தார்.
ஆனால் சீனர்கள இந்து சமுத்திரத்தில் கால்வைக்க வருவதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்து சமுத்திரத்தையும் சீனக்கடல் உள்ளிட்ட பசுபிக் சமுத்திரத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள்.
அத்தோடு தென்கிழக்காசியாவை தமது அரசியல் ஆதிக்கத்திற்குள்ளும் கொண்டுவந்தார்கள். உலகின் முதலாவது பெரிய கடற்படையையும் தமிழர்களே நிறுவினார்கள்.
கடல் கடந்து சாம்ராஜ்யம் ஒன்றை நிறுவலாம் என்பதை உலகுக்கு காட்டியவர்களும் இவர்களே. ஐரோப்பியர் காலத்திலும் ஈழத்தமிழ் கடலோடிகள் வங்கக் கடலில் பாய்மரக் கப்பல்களைக் தொடர்ந்து செலுத்தியவர்கள்.
அமெரிக்கா வரை பாய்மரக் கப்பல் செலுத்திய வரலாறு வல்வெட்டித்துறை கடலோடிகளுக்கு உண்டு. இத்தகைய கடலோடிகளின் வழித்தோன்றல்களின் பராக்கிரமத்தின் அடித்தளத்திலிருந்துதான் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளும் சர்வதேசக் கடல் விநியோகமும் கட்டியெழுப்பப்பட்டது.
2006ம் ஆண்டுக்கும் 2009க்கும் இடையில் விடுதலைப் புலிகளின் ஒன்பது ஆயுத விநியோக கப்பல்கள் அளிக்கப்பட்டன. இக்கப்பலில் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 160 தலைசிறந்த தமிழீழ மாலுமிகள் கொல்லப்பட்டனர்.இந்த மாலுமிகள் இன்று இருக்கின்ற உலகளாவிய மாலுமிகளுடன் ஒப்பிடுதலுக்கரியவர்கள்.
ஏனெனில் நவீன இயந்திர சாதனம் வசதிகளுடன் பண்டங்களை ஏற்றி இறக்கும் இன்றைய காலகட்டத்தில் , அதுவும் துறைமுகம் இன்றி நடுக்கடலில் வெறும் மனிதவலுவை பயன்படுத்தி நடுக்கடலில் வைத்து ஆயுதங்களை கப்பல்களில் இருந்து சிறிய படகுகளுக்கு மாற்றுவது என்பது இலகுவான காரியமல்ல.
ஆனால் ஈழத்தமிழ் மாலுமிகள் இதனை அசாத்தியத் துணிவுடன் உலகம் வியக்கும் வண்ணம் செய்து காட்டியவர்கள். மேற்படி மாலுமிகள் சுமார் கால்நூற்றாண்டு காலமாக கடல் பயணங்களிலும், விநியோகத்திலும் ஈடுபட்ட வாழ்நாள் அனுபவத்தை கொண்டவர்.
கொல்லப்பட்டவர்களில் பலர் போராட்டத்தில் இணைந்ததிலிருந்து தங்கள் குடும்பத்தவர்களையும், நமது தேசத்தையும், மக்களையும் தம் கண்ணால் பார்க்க முடியாமல் இறுதியில் கடலிலேயே கரைந்து போய்விட்டனர்.
இத்தகைய பெரும் தியாகங்களை செய்த அந்த தமிழ் உறவுகளுக்கு அந்த அழிவுக்குக் காரணமான சீன அரசு பிச்சை போடுகிறது. அது மட்டுமல்ல அவர்களுக்கு நிவாரண உதவி செய்கிறோம் என்று அந்த மக்களை ஏமாற்றவும் பார்க்கிறது.
அத்தோடு அந்த மக்களை தனக்கு சார்பாக திருப்பி இணைத்துக் கொள்ளவும் முயல்கிறது. இது எத்தகைய நயவஞ்சகத் தனமான அரசியல் சூதாட்டம். இந்தச் சூதாட்டத்தில் ஈழத்தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
இந்திய மீனவர்களின் நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்களுக்கான நிவாரணம் என்ற போர்வையில் நிவாரணத்தை வழங்கி தமிழக மீனவர்களுக்கும் வடபகுதி மீனவர்களுக்கும் இடையில் ஒரு பெரிய முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் தற்போது சீனாவும் இலங்கை அரசும் ஈடுபட்டுவருகின்றன.
தமிழக மீனவர்களுக்கும் தமிழீழ மீனவர்களுக்குமான பிரச்சனை என்பது அண்ணன் --தம்பி --மாமன்-- மச்சான் பிணக்குகள். இவை வீட்டிற்துள் தீர்க்கப்பட வேண்டியவை. இவை நேச முரண்பாடுகளே தவிர பகை முரண்பாடுகள் அல்ல.
இது நாம் நமது குடும்பங்களுக்குள் தீர்த்து வைக்கப்பட வேண்டியதும், புரிந்து கொள்ளப்பட வேண்டிய பிரச்சனையுமாகும். இதற்குள் அன்னியர் தலையிட வேண்டிய அவசியமும் இல்லை.அனுமதிக்கவும் கூடாது.
நமக்குள் ஆயிரம் சாதிச்சண்டை இருக்கும் அதற்குள் அந்நியன் உனக்கென்ன வேலை எனப் புரட்சிக்கவி பாரதி சொன்னதுதான் தமிழ் மீனவர் பிரச்சனைக்கு பொருந்தும். வங்கக் கடலும் பாக்குநீரிணையும் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் உரித்தானவை. இது தமிழன் கடல்.
இந்தக் தமிழன் கடலில் இரண்டு தமிழ்த் தேசிய இனமும் தமக்குரிய பங்குகளைத் தாமே பங்கிட்டுக் கொள்ள வேண்டியதுதான். இதற்குள் பஞ்சாயத்து பண்ண அந்நியர்களை அனுமதிக்கக் கூடாது.
உதவி செய்கின்றோம் என்ற போர்வையில் வடபகுதி மீனவர்களுக்கு உதவிகளைச் செய்து தமிழக மீனவர்கள் மீது வெறுப்பையும், கோபத்தையும் உண்டாக்குகின்ற ஒரு உளவியல் யுத்தம் உதவி என்ற போர்வையில் திணிக்கப்படுகிறது.
இது இந்து சமுத்திர ஆதிக்கத்திற்கான வலுச் சமநிலையை சீனா தன் பக்கம் திருப்புவதற்கான மூலோபாயமாகும்.
இந்து சமுத்திரத்தின் கடல் ஆதிக்கத்தில் தமிழிழ மீனவர்களின் பங்கு காத்திரமானது. அவர்களை தங்கள் பக்கம் திருப்பிவிட்டால் இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்தை தன் கைக்குள் கொண்டு வந்துவிட முடியும்.
இதனை இலங்கையும் சீனாவும் நம்புகின்றன. சிங்களப் பேரினவாதத்தின் இந்திய எதிர்ப்பு வாதம் இவ்வாறு சீனாவுக்கு துணைபுரிகிறது. இந்த உதவித் திட்டத்தின் மூலம் பாக்கு நீரிணையில் ஒரு செயற்கையான ""சீனப் பெருஞ் சுவர் "" கட்டப்படுகிறது.இது மிக ஆபத்தான நாசகார செயல் என்பதை மிகவும் ஆழமாகப் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழக மீனவர்களுக்கும் இலங்கை வடபகுதி மீனவர்களுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து விட்டால் இந்த செயற்கையான"" சீனப் பெருஞ் சுவர் "' இலங்கைக்குள் சீனா எந்தத் தடையுமின்றி செயற்படுவதற்கான பாதுகாப்பை நிரந்தரமாக வழங்கும்.
தமிழ் இனத்தை கொண்டே தொப்புள் கொடி தமிழக தமிழினத்தை முடக்கி இந்தியாவை முடக்குவதற்கான மூலோபாயமாக இந்த நடவடிக்கை பார்க்கப்பட வேண்டும். நீண்ட தொடர்ச்சியான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழீழ மக்கள் பொருளாதார ரீதியிலும், உளவியல் ரீதியிலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையை பயன்படுத்தி தமிழ் மக்களை மேலும் அழித்து ஒழிப்பதற்கான திட்டங்களை சிங்களப் பேரினவாதம் அரங்கேற்றி வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது வடபகுதி மீனவர்களையும் இந்திய மீனவர்களையும் மோதவிட்டு அவர்களுக்கிடையேயான ஒரு பகை முரண்பாட்டை தோற்றுவிக்க முயல்கின்றனர்.
அந்தச் செயல் திட்டத்தின் ஒரு பகுதிதான் வடபாதி மீனவர்களுக்கான நிவாரணம் வழங்கல் திட்டம். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தயாள குணத்தின் அடிப்படையில் எவரும் உதவிகள் செய்யலாம்.
ஆனால் உதவி என்ற பெயரில் தமிழ் மக்களை மூளைச்சலவை செய்து அவர்கள் கையினாலேயே அவர்களுடைய கண்ணை குத்துகின்ற சீனாவின் நயவஞ்சகத் திட்டங்களை தமிழ் மக்கள் முறியடித்து காட்ட வேண்டிய காலம் இது.
தி.திபாகரன்.M.A.