இலங்கை கடன் சுமையை குறைக்க சீனா முயற்சி: தம்முடன் இணைந்து உதவ ஏனைய தரப்புக்களுக்கு அழைப்பு!
இலங்கையின் தற்போதைய சிரமங்களை சமாளிக்க உதவுவதில் சாதகமான பங்கை ஆற்றுவதற்கு தொடர்புடைய நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் தம்மடன் இணைந்து செயல்படும் என சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கை கடன் பிரச்சினைக்கு சீனா தீர்வு
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பான விரைவான முன்னேற்றம் குறித்து ஆலோசிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இந்த வாரம் சீனாவுக்குச் செல்லவுள்ளதாக ஊடகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற சர்வதேச பொருளாதார மற்றும் நிதி நிறுவனங்களுடன் சீனா நீண்டகாலமாக நல்ல ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது என்றும் மாவோ கூறினார்.
இலங்கையின் கடன் பிரச்சினை தொடர்பில், இலங்கையின் சிரமங்கள் மற்றும் சவால்களுக்கு சீனா அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
இந்தநிலையில் தொடர்புடைய நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் சீனாவுடன் இணைந்து செயற்படவேண்டும்.
இதன் மூலம், இலங்கையின் தற்போதைய சிரமங்களை சமாளிப்பதற்கும், கடன் சுமையைக் குறைப்பதற்கும், நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் ஆக்கபூர்வமான பங்களிப்பைத் தொடரமுடியும் என்று நம்புவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.