சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய பணிப்புரை
சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்குக் கடுமையான சட்டங்களை உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்ட திணைக்களங்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்றைய தினம் (15.05.2023) ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து குதித்து 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம், களுத்துறை மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரால் 16 மாணவிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை, கம்பளையில் கொலை செய்யப்பட்ட இளம் பெண் போன்ற சம்பவங்களைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
தனியான சட்டம்
சில ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் கைகளில் நடைபெற்று வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை விரைவாக தடுக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அத்தகைய நடவடிக்கைகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் சட்ட அமைப்பு ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பதற்குத் தனியான சட்டமொன்றைக் கொண்டு வர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்ட அமைப்பைத் தயாரிக்கும் போது கையடக்கத் தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் போன்றவற்றைப் பாவித்து சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அறிவித்துள்ளார்.
சட்டங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்
அதன்படி, உரியச் சட்டங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.
பாடசாலை பாடத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வீட்டில் பெற்றோர்- பிள்ளை உறவுகள் மற்றும் மனநலம் தொடர்பாக புதிய உரையாடல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
குழந்தை தலைமுறையைப் பாதுகாக்க இவ்வாறான கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படவுள்ள நிலையில், குழந்தைகள், சிறுவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு பரந்த மனப்பான்மை கொண்ட பிள்ளையை உருவாக்கும் வகையில் சமூகத்தின் மனப்பான்மையை வளர்க்கும் வகையில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டத்தில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |