இரவில் இருளில் மூழ்கும் சாவகச்சேரி வைத்தியசாலை! தடுமாறிய வைத்திய அதிகாரி (PHOTOS)
யாழ். தென்மராட்சி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தொடர்ச்சியான மின்தடையால் நோயாளர்கள் அவதியுறும் நிலை தொடர்பில் ஆராய்வதற்காக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் நேற்றைய தினம் நேரடியாக வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மின்வெட்டு நேரம் வைத்தியசாலையில் உள்ள மின்பிறப்பாக்கிகள் செயலிழந்து காணப்படுவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் திடீரென விஜயம் மேற்கொண்ட அங்கஜன் வைத்தியசாலையின் பல பகுதிகளை ஆராய்ந்தார். அங்கு கூடியிருந்த மக்களிடம் வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வினவியபோது இவ்வாறு பதிலளித்துள்ளனர்.
நாட்டில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான மின்வெட்டு காரணமாக குறித்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்கள் இரவு நேரங்களில் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். அதுமட்டுமல்லாது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் நிம்மதியாக சாப்பிட முடியாது, தூங்கவும் முடியாமல் அவதிப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து வைத்தியசாலையின் மலசலகூட தொகுதியை பார்வையிட்ட அங்கஜன் பல குறைபாடுகள் இருப்பதை வைத்தியசாலை அத்தியட்சகரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
வைத்தியசாலையிலிருந்து வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரனை தொடர்பு கொண்ட அங்கஜன் குறித்த வைத்தியசாலையில் செயலிழந்துள்ள மின் பிறப்பாக்கிகளை உடனடியாக சீர் செய்யுமாறு சுகாதார பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தொடர்பில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனும் அங்கஜன் எம்பியுடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




