பிரித்தானிய வரலாற்றில் முதல்முறையாக இடம்பெறவுள்ள நிகழ்வு..! வெளியான அதிரடி அறிவிப்பு
பிரித்தானிய வரலாற்றில் புதிய வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், மன்னர் மூன்றாம் சார்லஸ் தான் செலுத்தும் வருமான வரி விவரங்களை வரும் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாகப் பொதுமக்களுக்கு வெளியிடவுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
பிரித்தானிய சட்டப்படி, பிரித்தானிய மன்னருக்கு வருமான வரி, மூலதன ஆதாய வரி (capital gains tax) அல்லது எலிசபெத் மகாராணியிடமிருந்து பெற்ற பரம்பரை சொத்துக்களுக்கான வரி ஆகியவற்றைச் செலுத்த வேண்டிய எந்தவொரு சட்டப்பூர்வ கட்டாயமும் இல்லை.
தனிப்பட்ட வருமானம் - சொத்து
இருப்பினும், அரசாங்கப் பொறுப்புணர்வையும், பொதுமக்கள் மத்தியில் தங்களைப் பற்றிய புரிதலையும் ஊக்குவிக்கும் ஒரு முன்மாதிரி நடவடிக்கையாக, மன்னர் சார்லஸ் தனது தனிப்பட்ட வருமானம் மற்றும் சொத்து விற்பனைகளுக்குத் தானாக முன்வந்து வரி செலுத்த ஒப்புக்கொண்டுள்ளார்.

மன்னரின் இந்த வரி விபரங்கள், வரும் வியாழக்கிழமை வெளியிடப்படவிருக்கும் அரச குடும்பத்தின் வருடாந்திர கணக்கு அறிக்கையின் ஒரு பகுதியாக இடம்பெறவுள்ளன.
மன்னர் சார்லஸ் தனது அதிகாரப்பூர்வ கடமைகளை மேற்கொள்வதற்காக 2025/26 நிதியாண்டில் பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து 132 மில்லியன் பவுண்டுகள் (சுமார் 175 மில்லியன் டொலர்கள்) மானியமாகப் பெற்றுள்ளார்.
அதிரடி அறிவிப்பு
இதுதவிர, அவருக்குச் சொந்தமான பரம்பரை நிலங்கள், தனிப்பட்ட தோட்டங்கள் மற்றும் முதலீடுகள் மூலமும் கணிசமான தனிப்பட்ட வருமானம் கிடைத்து வருகிறது.

தான் இளவரசராக (Prince of Wales) இருந்த காலத்திலிருந்தே தனது வரி விவரங்களை வழங்கி வந்ததாகவும், அதனைத் தொடர்ந்து மன்னராக இருக்கும் காலத்திலும் கடைப்பிடிக்க விரும்புவதாகவும் அரண்மனை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அரச குடும்பத்தினரின் சொத்து மற்றும் குடியிருப்பு ஏற்பாடுகள் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றக் குழு கடந்த ஆண்டு விசாரணை ஒன்றைத் தொடங்கியிருந்த பின்னணியில், அரண்மனையின் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.