இலங்கையில் பண்டிகை காலத்தின் பின்னர் கோவிட் பரவலில் ஏற்பட்டுள்ள மாற்றம்! வெளியாகியுள்ள தகவல்
பண்டிகை காலத்தைத் தொடர்ந்து, ஆராய்ச்சியாளர்கள் கோவிட் - 19 அறிகுறிகளில் கடுமையான மாற்றத்தையும், இளம் நோயாளிகளிடையே அதிகளவானோர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளமையையும் கவனித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை இயக்குநர் வைத்திய கலாநிதி சந்திமா ஜீவந்தரா இதனை தெரிவித்துள்ளார்.
கோவிட் -19 வைரஸின் தற்போதைய மாறுபாட்டைக் கண்டறிய தனது தலைமையிலான குழு ஆய்வுகள் நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் தற்போது நடத்தப்படும் பி.சி.ஆர் சோதனைகளில் இருந்து எஸ்-புரதங்களை அடையாளம் காண்பதில் சிரமங்களை சந்தித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
பி.சி.ஆர் சோதனையில் பல மரபணு இலக்குகள் பெறப்பட வேண்டும். வைரஸ் தொற்றுநோய்களை அடையாளம் காண உதவும் எஸ்-புரதங்கள் முக்கிய மரபணு இலக்குகளில் ஒன்றாக அமைந்துள்ளன.
இருப்பினும், தற்போது பி.சி.ஆர் சோதனைகளில் எஸ்-புரதங்களை அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளதாக ஜீவந்தரா குறிப்பிட்டுள்ளார். புதிய மாறுபாடு பரவி வரும் இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் இதே போன்ற சிரமம் இருந்தது.
எனவே, இது ஒரு புதிய மாறுபாட்டின் விளைவா? அல்லது ஏற்கனவே உள்ள வைரஸின் பிறழ்வின் விளைவா? என்பதை தீர்மானிக்க தாம் ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக சிறப்பு பி.சி.ஆர் சோதனைக் கருவிகளை கொள்வனவு செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த சோதனைக்கருவிகளின் மூலம் எஸ்-புரதங்களை அடையாளம் காணவும், தற்போது பரவி வரும் வைரஸ் ஒரு புதிய மாறுபாடா அல்லது ஏதேனும் பிறழ்வின் விளைவா? இந்த கருவிகள் மூலம் கண்டறியமுடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 10 மணி நேரம் முன்
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan