ஜனாதிபதி செயலாளர் பதவி தொடர்பில் பரவும் சர்ச்சை - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
ஜனாதிபதி செயலாளர் பதவியில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சுகாதார மற்றும் வெகுசனத் தொடர்புகள் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
குறுகிய நலன்களைக் கொண்ட ஒரு சிறு குழுவினரே திட்டமிட்ட அடிப்படையில் இவ்வாறான போலிச் செய்திகளை உருவாக்கிப் பரப்பி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் பதவியில் மாற்றம்
ஜனாதிபதி செயலாளர் பதவியில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக வெளியாகும் செய்திகள் குறித்து அவரிடம் முன்வைக்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போதைய ஜனாதிபதி செயலாளர் பதவியில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்துவதற்கோ அல்லது புதிய ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிப்பதற்கோ எமது அரசாங்கம் எவ்விதத்திலும் எதிர்பார்க்கவுமில்லை.
சுயநல நோக்கங்களைக் கொண்ட மிகச் சிறு குழுவொன்று, அரசாங்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பிற்குள் குழப்பங்களை விளைவிக்கும் நோக்கில், தங்களுக்குள் இவ்வாறான முற்றிலும் உண்மைக்கு புறம்பான போலிச் செய்திகளைத் திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டு சமூகத்தில் பரப்பி வருகின்றன.
தற்போதைய ஜனாதிபதி செயலாளர் தனது கடமைகளை சிறப்பாவே செய்து கொண்டிருக்கின்றார் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.