சம்பந்தனின் சிறப்புரிமை மீறப்பட்டமைக்கு மன்னிப்பு கோரும் சந்திரகுமார்
தனது பதிவின் மூலம் சம்பந்தனின் சிறப்புரிமை மீறப்பட்டமைக்காக ஊடகங்கள் வாயிலாகவும் மன்னிப்பு கோருவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதி செயலாளர் யோகராஜா சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் நேற்று (13.10.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சிறப்புரிமை மீறல்
மேலும் கூறுகையில், “நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் 19.07.2021 அன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தமையினை வீடியோவாக முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்திருந்தேன்.

குறித்த முகப்புத்தக பதிவு தொடர்பில் 06.08.2021 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது நாடாளுமன்ற உரையில் எனது முகநூல் பதிவினூடாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும் குறித்த பதிவு தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
எனது பதிவின் மூலம் சம்பந்தனின் சிறப்புரிமை மீறப்பட்டமைக்காக ஊடகங்கள் வாயிலாகவும் மன்னிப்பு கோருகின்றேன்.
விசாரணை
இவ்விடயம் தொடர்பில் விசாரணைக்காக கடந்த 04.10.2022 அன்று நாடாளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டு நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை குழுவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தேன்.

நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை குழுவின் தவிசாளர் விஜயதாச ராஜபக்ச முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையில், என்னுடைய முகப்புத்தக பதிவில் வெளியிடப்பட்ட வீடியோ மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமை மற்றும் அதை மீறுவோருக்கான சட்ட ஏற்பாடுகள் குறித்து குழுவின் தவிசாளர் விஜயதாச ராஜபக்ச எனக்கு தெளிவுபடுத்தியிருந்தார்.
சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமையினை ஏற்றுக்கொண்ட நான் அதற்கு மன்னிப்பும் கோரியிருந்தேன்.
முகப்புத்தக பதிவு
நான் ஒரு கட்சியின் உறுப்பினர் என்ற ரீதியில் அரசியல் கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் சம்பந்தன் நாடாளுமன்றத்திற்கு வருகை தரும்போது கைத்தாங்கலாக அழைத்து வரப்பட்டமையினை சுட்டிக்காட்டி, “நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இளையவர் ஒருவருக்கு வழங்கலாம்” என எனது கருத்தை பதிவு செய்திருந்தேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை தொடர்பிலும் அது தொடர்பான சட்ட ஏற்பாடுகள் தொடர்பிலும் எனக்கு மட்டுமல்ல பொது மக்களுக்கும் தெளிவு இல்லை.
நாடாளுமன்றத்தில் வீடியோ எடுக்கப்பட்டது இது முதல் தடவையல்ல பல தடவைகள் இவ்வாறு வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக நாடாளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வீசப்பட்ட சம்பவங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டன.
அப்போது வீடியோ பதிவு செய்தவருக்கு எதிராக இவ்வாறான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் ஊடகங்கள் வாயிலாக எனக்கும் தெளிவு கிடைத்திருக்கும்.
சட்ட நடவடிக்கை
சிறப்புரிமை என்பது நாடாளுமன்ற உறுப்பினர் சம்மந்தனுக்கு மட்டுமானது அல்ல. ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உண்டு.
மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் பல உறுப்பினர்கள் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை மிகக் கீழ்த்தரமாக விமர்சித்து வருகின்றனர்.
பாதிக்கப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்புரிமையினை மீறி விமர்சித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
நாடாளுமன்ற சிறப்புரிமை மற்றும் அது தொடர்பிலான சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவு இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்நீச்சல் சீரியலின் புதிய வில்லன் ராவணன் ஆதிமுத்துவின் மனைவி யார் தெரியுமா? ஷாக் கொடுத்த புரோமோ Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam