தனியான கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட வேண்டும்: சந்திரகாந்தன் தரப்பு ஆதரவு
போரதீவுபற்று பிரதேசத்தை உள்ளடக்கிய வகையில் படுவான்கரை பிரதேசத்தில் மேலும் ஒரு தனியான கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற மிக நீண்டகால கோரிக்கையை வரவேற்பதாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் திக்கோடை கணேசா வித்தியாலத்திற்கான ஒலிபெருக்கி சாதனம் வழங்கி வைக்கின்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு மேலும் அவர் தெரிவிக்கையில்,
திருக்கோவில் கல்வி வலயம்
பல்வேறு யுத்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு இடர்பாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எமது சமூகத்தின் கல்வி துறையினை வலுவாக்குகின்ற போதே வலுவான கட்டமைப்பாக தமிழர்களின் இருப்பை நிலைப்படுத்திக் கொண்டு பயணிக்க முடியும்.
திருக்கோவில் கல்வி வலயம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இரண்டு தமிழ் கல்வி வலயங்களில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயமும் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் கல்வி வலயமும் அமைகின்றது.
அதனூடாக இன்று இரண்டு கல்வி வலயங்களுக்குட்பட்ட வறுமையில் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி நிலைமைகள் மேம்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திருக்கோவில் கல்வி வலயத்தில் அண்மையில் அதிகளவான மாணவர்கள் பல்கலைகழக தேர்வுகளை பெற்றிருந்தார்கள்.
அதே போன்று மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலும் அதிகளவானவர்கள் கல்வி பொது தராதர உயர்தர பாடநெறியை கற்பதற்கும், அதேபோன்று தரம் ஐந்து புலமைகப் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறுவதற்குமான வாய்ப்புக்கள் அதிகரித்திருக்கின்றன.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |