மில்கோ நிறுவன தலைவரை பதவி நீக்குமாறு கோரி நுவரெலியாவில் போராட்டம்
மில்கோ நிறுவன தலைவரை பதவிநீக்கம் செய்யுமாறு கோரி நுவரெலியாவில் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நுவரெலியா - அம்பேவல ஹைலேண்ட் மில்கோ பால் சேசகரிப்பு நிலையத்துக்கு முன்பாக நேற்றைய தினம் (01.11.2023) இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அரசாங்கத்தின் தவறுகள்
அரசாங்கமானது மில்கோ நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் பால்மாவுக்கான இறக்குமதி வரியை குறைத்துள்ளது.
ஆகவே, தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பு இழப்புக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும், நிலுவைத் தொகை மற்றும் கொடுப்பனவுகள் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும் மற்றும் மில்கோ நிறுவனத் தலைவர் ரேணுகா பெரேரா பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அரசாங்கம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பாலை புறக்கணித்து, வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பாலைக் கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மில்கோ நிறுவனத்தை நஷ்டமடையச்செய்து, அதனையே காரணமாக காட்டி நிறுவனத்தை விற்பனை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்கின்றது.
இதனால் உள்நாட்டு பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் போராட்டத்துக்கான தீர்வு விரைவில் வழங்கப்படாவிடின் எதிர்வரும் நாட்களிலும் பாரியளவில் போராட்டங்கள் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




