தங்க விற்பனையை ஒப்புக்கொண்டது இலங்கை மத்திய வங்கி!
மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு நிலைப்பாட்டின் அமைப்பு தொடர்பாக இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
இதன்படி ஒரு மத்திய வங்கியின் சர்வதேச இருப்பு மேலாண்மை என்பது ஒரு மாறும் மற்றும் தொழில்நுட்ப செயல்முறையாகும்,
2021 டிசம்பர் இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் சர்வதேச கையிருப்பு நிலையின் அமைப்பில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பான பல தவறான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
எனவே உண்மை நிலவரம் தொடர்பாக தகவல்களை வழங்குவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2008 ஆம் ஆண்டின் இறுதியில் மத்திய வங்கியில் 92 மில்லியன் அமெரிக்க டொலர்களாக தங்க இருப்பு இருந்தது.
அது படிப்படியாக 2014 ஆம் ஆண்டின் இறுதியில் 893 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது. எனவே, கையிருப்பில் உள்ள தங்க இருப்புகளின் பங்கு அவ்வப்போது மாறக்கூடும் என்பது தெளிவாகிறது,
அதாவது இருப்பு மேலாண்மை முன்னுரிமைகளுக்கு ஏற்ப, மத்திய வங்கி அதன் தங்க இருப்புகளை வாங்க, வைத்திருக்க அல்லது விற்பனை செய்யவேண்டிய நிலைகளை இது குறிப்பிடுகிறது.
இதனடிப்படையில் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் மத்திய வங்கியின் தங்கக் கையிருப்பு, பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டியதன் அடிப்படையில் 175 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டிருக்கலாம் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
முன்னதாக நாட்டில் டொலர் கையிருப்பு அதிகரித்திருப்பதாக வெளியான தகலையடுத்து, மத்திய வங்கியானது கையிருப்பிலிருந்த தங்கத்தை விற்பனை செய்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா பகிரங்கப்படுத்தியிருந்தார். எனினும் மத்திய வங்கி இது தொடர்பில் எந்தத் தகவல்களையும் வெளியிடாமல் இருந்தது.
இந்தநிலையிலேயே இது தொடர்பான தகவலை தற்போது மத்திய வங்கி அறிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், கடந்த மாதம் டொலர் கையிருப்பு அதிகரிக்கும் என்றும் அதற்கான இரகசியத்தை வெளியிட முடியாது என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
