பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்கள் மற்றும் அடையாளங்களில் பரவும் புதிய மோசடி:விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளைப் போல போலியான வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் கணக்குகளை உருவாக்கி, பொதுமக்களிடம் பணம் பறிக்கும் புதிய வகை மோசடி குறித்து இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இலங்கையில் அண்மைக்காலமாக இந்த மோசடி வலைப்பின்னல் வேகமாக பரவி வருவதாக கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்கள் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி மோசடி
மோசடிக்காரர்கள் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்கள் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி போலியான கணக்குகளை உருவாக்குகின்றனர்.

பின்னர், அந்த கணக்குகள் மூலமாக பொதுமக்களை தொலைபேசி அழைப்புகள், வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் டெலிகிராம் சாட்கள் மூலம் தொடர்பு கொள்கின்றனர்.
பாதிக்கப்படுபவர்களிடம் அவர்கள் மீது ஏதோவொரு குற்றச்சாட்டு இருப்பதாகவோ அல்லது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவோ கூறி மோசடிக்காரர்கள் மிரட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், குறிப்பிட்ட தொகையை தங்களுக்கு பணமாகவோ அல்லது நிதிப் பங்களிப்பாகவோ செலுத்த வேண்டும் என மோசடியாளர்கள் பலவந்தப்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பணம் அனுப்ப வேண்டாம்
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அதிகாரிகள், இலங்கை பொலிஸார் ஒருபோதும் சமூக ஊடகங்கள், குறுஞ்செய்தி செயலிகள் அல்லது தனிப்பட்ட கணக்குகள் மூலமாக பொதுமக்களிடம் பணம் கோருவதில்லை என்பதை திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளனர்.
சமூக ஊடகங்கள் அல்லது குறுஞ்செய்தி செயலிகள் மூலமாக தங்களை பொலிஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு யாராவது பணம் கேட்டால், அவர்களுக்கு எக்காரணம் கொண்டும் பணம் அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய சந்தேகத்திற்குரிய அழைப்புகள் அல்லது செய்திகள் வந்தால், உடனடியாக அதன் உண்மைத்தன்மையை அதிகாரப்பூர்வ வழிகளில் சரிபார்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற மோசடி முயற்சிகளை எதிர்கொள்ளும் பொதுமக்கள், அதுகுறித்து உடனடியாக தங்களுக்கு அருகிலுள்ள போலீஸ் நிலையத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமோ புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து வரும் மிரட்டல் செய்திகளுக்கு பயந்து ஏமாற வேண்டாம் என கணனி அவசர பதிலளிப்பு பிரிவு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.