சுவாமி விபுலானந்த அடிகளாரின் 130ஆவது ஜனன தின நிகழ்வு மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு (Photos)
உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 130வது ஜனன தின நிகழ்வானது மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபையினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வானது சுவாமி விபுலானந்த அடிகளாரின் உருவச் சிலை அமைந்துள்ள நீரூற்றுப் பூங்கா வளாகத்தில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜா தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலனால் சுவாமியின் திரு உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நிகழ்வில் கலந்து கொண்ட ஏனைய அதிதிகளால் சுவாமியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், பூக்கள் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து, மட்/வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவிகளால் "வெள்ளை நிற மல்லிகையோ" பாடல் பாடப்பட்டதுடன், அதிதிகளினால் நினைவுப் பேர் உரைகளும் ஆற்றப்பட்டு ஜனனதின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் மலர் தூவி உணர்வுப்பூர்வமாக அஞ்சலியும் செலுத்தினர்.
இதேவேளை, மட்டக்களப்பு - கல்லடி, உப்போடையில் அமைந்துள்ள மணி மண்டப வளாகத்தில் முத்தமிழ்
வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 130 வது ஜனன தின நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






