சீனாவின் கைகளில் இலங்கையின் எதிர்காலம்!
சீனாவின் கைகளில் உள்ள முக்கிய பொறுப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளின்போது, சீனாவிடம் இருந்து இலங்கை பெற்றுள்ள கடன், சிக்கலாகியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனில் 15% சீனாவிடம் இருந்தே பெறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கையின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு, சீனா, இலங்கைக்கான கடனில் மீளமைப்பை மேற்கொள்வதற்கு இன்னும் இணங்கவில்லை.
எனவே சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு நிதியுதவியை வழங்குமானால், அதனைக் கொண்டு இலங்கை, சீனாவின் கடனை திருப்பிச் செலுத்தும் செயற்பாடே இடம்பெறும்.
இலங்கைக்கு இயலாத நிலை ஏற்படும்
மாறாக, சர்வதேச நாணய நிதியத்தின் நிதியைக்கொண்டு முதலீடுகளை மேற்கொள்ளவும், அதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் கடனை திருப்பிச்செலுத்துவதற்கும் இலங்கைக்கு இயலாத நிலை ஏற்படும். இதனையே மத்திய வங்கியின் ஆளுநர் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுவாக, நாடுகளுக்கான கடன் வழங்குநர்கள், தங்கள் கடன்களை மீளமைப்பதற்கு இணக்கம் தெரிவிக்காத வரையில், நாடுகளுக்கு பிணை எடுப்பதில்லை என்ற கொள்கையை சர்வதேச நாணய நிதியம் கொண்டுள்ளது.
இதனடிப்படையிலேயே இலங்கைக்கான நிதியுதவியையும் சர்வதேச நாணய நிதியம் பரிசீலிக்கும் என்பதே மத்திய வங்கியின் ஆளுநரின் கருத்தாக அமைந்துள்ளது.
ஹெயார் கட் அவசியம்
எனவே சீனாவிடம் இருந்து பெற்ற கடன் தொடர்பில் அந்த நாட்டுடன் மீளமைப்பு ஒன்றுக்கு செல்வதே(ஹெயார் கட்) தற்போதுள்ள சிக்கல் நிலையாகும்.
ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை நடத்தும் பேச்சுவார்த்தைக்கு தமது ஆதரவு உண்டு என்று சீனா கூறியிருந்தாலும், இன்னும் கடன் மீளமைப்பு தொடர்பில் கருத்துக்களை வழங்கவில்லை.
இந்தநிலையில் இலங்கையின் ஒரு நல்ல நண்பராக சீனா, மற்ற கடன் வழங்குநர்களால் வழங்கப்படும் அதேபோன்ற நிவாரணத்தை வழங்கும் என்று தாம் உறுதியாக நம்புவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.
வரலாற்றில் முதல் தடவையாக கடந்த மாதம், இலங்கை வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.
அதேநேரம் சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்வதேச சமூகத்தின் ஆதரவில் இந்த ஆண்டு $5 பில்லியன் தேவை என்று இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தைக்காக கொழும்புக்கு வரவுள்ளது.
இதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் முன்னாள் ஆளுநராக இருந்த அஜித் நிவார்ட் கப்ராலுக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட நந்தலால் வீரசிங்க, இம்மாத இறுதியில் இருந்து முழு ஆறு வருட காலத்திற்கு மீண்டும் நியமிக்கப்படுவாரா என்பது குறித்து நிச்சயமற்ற நிலை உள்ளது.
எனினும் தாம் தமது பதவியை தொடர விருப்பம் தெரிவித்துள்ளதாக வீரசிங்க தெரிவித்துள்ளார்
நான் தொடர்ந்தும் இருக்க விரும்புகிறேன்
“நான் பொறுப்பேற்றபோது இரண்டு மாதங்கள் மட்டுமே சேவை செய்துவிட்டு திரும்பிச் செல்வேன் என்ற எதிர்பார்ப்புடன் வரவில்லை“
“அப்படி இருந்திருந்தால், தாம் பதவியை ஏற்றிருக்கமாட்டேன்” அத்துடன் இலங்கையில் உள்ள பிரச்சினை இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்படக்கூடிய விஷயமல்ல என்றும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.