ஆலயத்தில் கோவிட் சட்டத்தை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல்
மட்டக்களப்பு - செங்கலடி ஐயங்கேணி வைரவர் ஆலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மக்களை ஒன்று திரட்டி இன்று (08) தீ மிதிப்பு சடங்கு நடாத்திய நிலையில் பொலிஸார், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு ஆலய தலைவர் செயலாளர் உட்படச் சட்டத்தை மீறிய 3 பேருக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்குக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸாருடன் இணைந்து சம்பவதினமான இன்று குறித்த ஆலயத்தை முற்றுகையிட்டு அங்கு சுகாதார நடைமுறைகளை மீறி ஆலயத்தில் மக்களை ஒன்றிணைத்தமை மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது மீறிச் செயற்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆலய தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட மூவருக்கு எதிராக பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்து அவர்களை எதிர்வரும் புதன்கிழமை (11) ம் திகதி நீதிமன்றத்தில் ஆயராகுமாறு உத்தரவிட்டு விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி மாரியமன் ஆலய உற்சவத்தில் சுகாதார சட்டத்தை மீறிப் பங்கேற்ற 114 பேருக்குக் கடந்த வியாழக்கிழமை கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




