நாமலுக்கு எதிரான நிதிமோசடி வழக்கு தொடர்பில் சிஐடியின் அடுத்த கட்ட நகர்வு
நிதிமோசடி குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) உள்ளிட்ட சந்தேக நபர்கள் குழுவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை இன்று (13) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய போது சட்டவிரோதமான வழிகளில் சம்பாதித்ததாகக் கூறப்படும் 15 மில்லியன் தொகையை என்.ஆர். கன்சல்டன்சி (பிரைவேட்) லிமிடெட்டில் முதலீடு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனை
இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஏனைய மற்ற சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.
இதன்போது, இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிந்துவிட்டதாகவும், வழக்கின் விசாரணை முடிவுகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ள போதிலும், சட்டமா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கவில்லை என குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துளளனர்.
அதன்படி, வழக்கை ஓகஸ்ட் 07 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட நீதவான், அந்தத் திகதியில் சட்டமா அதிபரின் ஆலோசனையை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)