இராயப்பு ஆண்டகையின் சாட்சியத்தை மறுதலித்த கர்தினால் மல்கம்! நாடாளுமன்றில் வெளிப்படுத்தப்பட்ட ஆதங்கம்
யுத்தத்தில் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தனது நேரடி சாட்சியத்தை வழங்கியிருந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
யுத்தத்தின்போது இவ்வளவு மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள், காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை ஆயர் அவர்கள் கடுமையாக வலியுறுத்தியிருந்ததார், எனினும், அதனை எங்களுடைய கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுத்திருக்கின்றார்.
அருட்தந்தை மேரி பஸ்டியன்,அருட்தந்தை ரஞ்சித், அருட்தந்தை ஜிம்ரோன், அருட்தந்தை பிரான்ஸிஸ் உள்ளிட்டவர்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட கத்தோலிக்க குருமார்கள்.
நான் கர்தினாலிடம் ஒரு விடயத்தை கேட்க விரும்புகின்றேன், இவர்களெல்லாம் கொல்லப்பட்டபோது கர்தினால் மல்கம் ரஞ்சித் ஏன் மௌனமாக இருந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.